Courtallam Falls: தொடங்கியாச்சு சீசன்.. ஒரே நாளில் குற்றாலம் சென்று வருவது எப்படி?
ஜூன் மாதத்தில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் விழ தொடங்கியுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சுற்றுலா விருந்தாகும். அதன்படி வெளியூர்களில் இருந்து குற்றாலத்திற்கு ஒரு நாள் பயணம் செய்வதற்கான வழிமுறைகளை பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை (South-west Monsoon) கேரளாவிற்கு மிகப்பெரிய பலமாக அமையும். அதேசமயம் இந்த மழை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்கு மிகப்பெரிய சுற்றுலாக் காலமாக இருக்கும். எப்படி எனக்கேட்டால் அதுதான் குற்றால சீசன் (Courtallam Season). தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் ஏராளமான அருவிகள் உள்ளது. இங்கு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும். குற்றால அருவிகளில் நீராட உள்ளூர் முதல் உலக அளவிலான மக்கள் வரை படையெடுத்து வருவது மிகவும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் செயலாகும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குற்றால அருவிகளில் நீராடி மகிழ்வார்கள். உள்ளூர் மக்களுக்கு குற்றாலம் சென்று வருவது மிக எளிதான செயல் என்ற நிலையில் வெளியூர் மக்கள் ஒரே நாளில் குற்றால அருவிகளுக்கு சென்று வருவது எப்படி என்பது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
பயண திட்டம் முக்கியம்
வெளியூரிலிருந்து குற்றாலம் செல்ல நினைப்பவர்கள் முதலில் பயணத் திட்டத்தை சரியாக உருவாக்க வேண்டும். நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் தென்காசி அல்லது திருநெல்வேலிக்கு செல்லும் ரயில்களில் முதலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணப்படலாம். தென்காசிக்கு நேரடியாக செல்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. அங்கிருந்து பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் ஆகியவை மூலம் நாம் அனைத்து குற்றால அருவிகளுக்கும் செல்லலாம்.
ஒருவேளை தென்காசிக்கு செல்வதற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என நினைத்தால் நேராக திருநெல்வேலி செல்லலாம். திருநெல்வேலியில் இருந்து தினமும் காலை 6.50, 9.50, மதியம் 1.40, மாலையில் 6.20 ஆகிய நேரங்களில் பாசஞ்சர் ரயில்கள் தென்காசிக்கு இயக்கப்படுகிறது. அதேசமயம் இரவு 8:40 மணிக்கு ஈரோடு – செங்கோட்டை பாசஞ்சர் ரயிலும், இரவு 11 மணிக்கு தூத்துக்குடி – பாலக்காடு வரை பாலருவி ரயிலும் தென்காசி வழியாக செல்லக்கூடியது. தென்காசி, செங்கோட்டை இரண்டுக்கும் இடைப்பட்ட தூரத்தில் தான் குற்றால அருவிகள் உள்ளது.
ஒரே நாளில் செல்வது எப்படி?
நீர்நிலைகளில் நீராடுவது என்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயலாகும். அதனால்தான் ஆறு, குளம், அருவி, கடல் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நீராடி மகிழ்கின்றனர். இப்படியான பட்சத்தில் குற்றாலத்துக்கு நீங்கள் செல்ல விரும்பினால் நிச்சயமாக சனி மற்றும் ஞாயிறு போன்ற வார விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். காரணம் இந்த காலகட்டத்தில் கூட்டம் அலைமோதும்.
அதே சமயம் வார நாட்களில் விடுமுறை எடுத்து விட்டு தாராளமாக நீங்கள் சென்று வரலாம். தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு ஏராளமான தனியார் பேருந்துகளும், அரசு பேருந்துகளும் அனைத்து ஊர்களிலும் இருந்து இயக்கப்படுகிறது.
நீங்கள் முடிந்தவரை ஆட்டோ அல்லது காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஒவ்வொரு அருவிக்கும் சென்று நீராடலாம். சீசன் தொடங்கியிருப்பதால் வரிசையில் என்று மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஒவ்வொருவருக்கும் நீராட அனுமதி அளிக்கப்படுகிறது. குற்றாலத்தில் மெயின் அருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, புலியருவி, பழைய குற்றாலம் ஆகியவை உள்ளது. குளு குளு சீசனை அனுபவிக்கும் விதமாக ஏராளமான உணவு பண்டங்கள், பழங்கள் ஆகியவை விற்பனை செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் குற்றால நாதர் கோயில், படகு குழாம் ஆகியவையும் உள்ளது.
நீங்கள் உங்கள் ஊரில் இருந்து இரவு கிளம்பி காலையில் தென்காசி அடைய வேண்டும். பின் அங்கிருந்து காலை முதல் மாலை வரை அனைத்து அருவிகளையும் பார்த்து விட்டு ஊர் திரும்பலாம். அதேசமயம் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து பொறுத்து தான் நீராட அனுமதி அளிக்கப்படும் என்பதால் நீங்கள் செல்லும் நாளில் நிலவரம் எப்படி இருக்கிறது என்று தெரியாது. இருந்தாலும் சீசனை அனுபவிக்க செல்லுங்கள்.