டெல்லி, ஏப்ரல் 17, 2026: பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறவில்லை; தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனதன் காரணமாக நிறைவேற்றப்படவில்லை. பெண்கள் இடஒதுக்கீடு திருத்த மசோதா மக்களவையில் தோல்வியடைந்தது. மசோதா நிறைவேற தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் 489 உறுப்பினர்கள் வாக்களித்ததில், 278 பேர் ஆதரித்து வாக்களித்தனர்; 211 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இதனால் மசோதா தோல்வியடைந்தது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 48 வாக்குகள் குறைவாக இருந்தது.
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி:
மசோதாவை மக்களவையில் எதிர்க்கட்சிகள் தோற்கடிப்பார்கள் என்று ராகுல் காந்தி முன்பே கூறியிருந்தார். ஏப்ரல் 18ஆம் தேதி காலை 11 மணிக்கு மீண்டும் கூடுவதற்காக மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை 1992ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் பி.வி நரசிம்ம ராவ் அறிமுகப்படுத்தியபோதும், காங்கிரஸ் அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
மக்களவையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களின் உறுப்பினர் எண்ணிக்கை தற்போது 129 ஆக உள்ளது. 50% அதிகரிப்பு வழங்கப்பட்டால் அது 195 ஆக உயரும்; யாருக்கும் இழப்பு இருக்காது என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வரலாற்று பாரபட்சம் காட்டி வருகிறது என்றும் அவர் கூறினார். பாஜக ஆட்சியில்தான் பிரதமர் மோடி போன்ற ஓபிசி பிரதமரை இந்தியா கண்டது என்றும் தெரிவித்தார்.
மசோதாவை எதிர்த்ததற்காக காங்கிரஸ் கட்சி தேர்தலில் பெண்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும் விமர்சித்தார். எதிர்க்கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு அளிக்காதது வருத்தகரமானது என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.