ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, இந்திய வான்வெளியை பயன்படுத்தவில்லை.. PIB திட்டவட்டம்!
PIB Denied Indian Airspace Rumors | ஈரான் - இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் ஜூன் 22, 2025 அன்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு அமெரிக்கா இந்திய வான்வெளியை பயன்படுத்தியதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு பிஐபி மறுப்பு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

டெல்லி, ஜூன் 23 : ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா (America Attack on Iran), இந்திய வான்வெளியை (Indian Airspace) பயன்படுத்தவில்லை என்று பிஐபி (PIB – Press Information Bureau) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஜூன் 22, 2025 அன்று ஈரான் மீது அமெரிக்கா நள்ளிரவில் தாக்குதல் நடத்திய போது, இந்திய வான்வெளியை பயன்படுத்தியதாக சமூக வளைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், அந்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என்று பிஐபி தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பிஐபி கூறியுள்ளது என்ன என விரிவாக பார்க்கலாம்.
ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா
அணு ஆயுத உற்பத்தி விவகாரத்தில் ஈரான் – இஸ்ரேல் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக ஜூன் 13, 2025 அன்று இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இவ்வாறு மாறி மாறி இரு நாடுகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையே ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் தனது கருத்துக்களை பதிவு செய்து வந்தது. ஆனால், அவற்றுக்கும் ஈரான் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.




இந்த நிலையில், நேற்று (ஜூன் 22, 2025) ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல் நடத்தியது. குறிப்பாக ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய அணு உலைகள் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தியது. அமெரிக்காவின் இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு ஈரானும் எதிர்வினை ஆற்றும் வகையில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதனால் உலக அளவில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் தாக்குதலுக்கு அமெரிக்கா இந்திய வான்வெளியை பயன்படுத்தவில்லை – பிஐபி
Several social media accounts have claimed that Indian Airspace was used by the United States to launch aircrafts against Iran during Operation #MidnightHammer #PIBFactCheck
❌ This claim is FAKE
❌Indian Airspace was NOT used by the United States during Operation… pic.twitter.com/x28NSkUzEh
— PIB Fact Check (@PIBFactCheck) June 22, 2025
இந்த நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, இந்திய வான்வெளியை பயன்படுத்தியதாக சமூக வளைத்தளங்களில் பலர் பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ள பிஐபி, ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலின் போது அமெரிக்கா இந்திய வான்வெளியை பயன்படுத்தியதாக சில சமூக ஊடக பயனர்கள் கூறி வருகின்றனர். அது முற்றிலும் தவறானது. ஈரான் மீதான தாக்குதலில் போது அமெரிக்கா, இந்திய வான்வெளியை பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.