AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மத்திய அமைச்சர்கள் வெயிட்டிங்.. இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தும் பிரதமர் மோடி

PM Narendra Modi : பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட உள்ளார். இக்கூட்டத்தில் பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகள், சமீபத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம், எதிர்காலத் திட்டங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

மத்திய அமைச்சர்கள் வெயிட்டிங்..  இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தும் பிரதமர் மோடி
கோப்புப் படம்
C Murugadoss
C Murugadoss | Published: 21 May 2026 08:35 AM IST

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு மத்திய அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதற்காக அனைத்து மத்திய அமைச்சர்களும் தேசிய தலைநகரிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இக்கூட்டத்தில் பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகள், சமீபத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம், எதிர்காலத் திட்டங்கள் ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் தனது வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பிய பிறகு கலந்துகொள்ளும் முதல் முக்கியக் கூட்டம் இதுவாகும். அனைத்து மத்திய அமைச்சர்கள், தனிப் பொறுப்பு வகிக்கும் இணை அமைச்சர்கள் மற்றும் இதர இணை அமைச்சர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற யூகங்களுக்கு மத்தியில், இந்த ஆண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

மேற்கு ஆசிய சிக்கல்கள்

தற்போது நிலவிவரும் மேற்கு ஆசியா நெருக்கடி மற்றும் அதனால் இந்தியாவில் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கம் ஆகியவை இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அப்பகுதியில் அதிகரித்து வரும் பதட்டங்களைத் தொடர்ந்து, எண்ணெய் விலைகள், எரிபொருள் விநியோகச் சங்கிலிகள் மற்றும் பணவீக்கம் தொடர்பான கவலைகளை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

தமது வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பும் பிரதமர், நிலைமையை நேரில் ஆய்வு செய்வார் எனத் தெரியவந்துள்ளது. இன்றைய கூட்டத்தில், பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் செயல்திட்டங்களின் பல்வேறு அம்சங்கள் குறித்தும், அவற்றை முடிந்தவரை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது எப்படி என்பது குறித்தும் விவாதிக்கப்படும்.

தற்போதைய நெருக்கடிகள்

தற்போதைய நெருக்கடியைக் கண்காணிப்பதற்கும், அதன் தாக்கங்களிலிருந்து இந்தியாவைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழுவை அரசாங்கம் ஏற்கனவே அமைத்துள்ளது. இக்குழுவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர், மேற்கு ஆசிய நெருக்கடி மற்றும் அதன் பொருளாதார விளைவுகள் குறித்து உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குடிமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பல்வேறு அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் அவர் அறிவுறுத்தல்களை வழங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசிய மோதல் தொடங்கிய உடனேயே, குடிமக்களின் பிரச்சினைகளையும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பிரச்சினைகளையும் தீர்க்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று மோடி உத்தரவிட்டிருந்தார்.

அரசு நிலைமையை 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும், கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கையிருப்பு தேவைப்படுவதாகவும் ராஜ்நாத் சிங் சமீபத்தில் கூறியிருந்தார். எரிசக்தி, விவசாயம், உரங்கள், விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்து போன்ற துறைகள் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் மாற்றங்கள் குறித்த யூகங்கள் வலுவாக இருப்பதால், இந்தக் கூட்டம் பெரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.

Follow Us