UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர், NPCI தலைமையிலான யுபிஐ and Services Steering Committee, எம்.டி.ஆர் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமா என்பது குறித்து பரிசீலிக்கும். அவ்வாறு அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டால், அதன் அளவு மற்றும் நடைமுறைகள் குறித்து இந்தக் குழு தீர்மானிக்கும்.
ஆகஸ்ட் 10, 2026: யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் பொதுமக்களிடம் தற்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், எதிர்காலத்திலும் யுபிஐ பரிவர்த்தனைகள் இலவசமாகவே தொடரும் என நம்புவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிகர் தள்ளுபடி விகிதம் எனப்படும் எம்.டி.ஆர் கட்டணம் விதிக்க சட்டப்பூர்வ வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதாவில் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதனால், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்:
இதுகுறித்து விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன், “யுபிஐ கட்டணத்தை நுகர்வோர் செலுத்துவார்களா? இல்லை. யுபிஐ தொடங்கப்பட்ட காலத்திலிருந்து நுகர்வோருக்கு இலவசமாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் எந்தப் பரிவர்த்தனை கட்டணமும் செலுத்தாமல் இந்த உடனடி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
2007ஆம் ஆண்டு இயற்றப்பட்ட Payment and Settlement Systems Act-ன் 10A பிரிவில் மாற்றங்களைச் செய்வதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுகள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம், எந்தெந்த மின்னணு பணப் பரிவர்த்தனை முறைகள் அல்லது பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கக் கூடாது என்பதை அரசு அறிவிப்பு மூலம் தீர்மானிக்க முடியும்.
எனினும், இந்தத் திருத்தம் யுபிஐ பயனாளர்களுக்கு நேரடியாக புதிய வரியையோ பரிவர்த்தனைக் கட்டணத்தையோ விதிக்கவில்லை. தற்போது நடைமுறையில் உள்ள Zero-எம்.டி.ஆர் முறையின்படி, UPI மற்றும் RuPay டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் தகுதியான பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டணம் வசூலிக்க முடியாது.
உடனடியாக எம்.டி.ஆர்கட்டணம் விதிக்கப்படாது:
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர், NPCI தலைமையிலான யுபிஐ and Services Steering Committee, எம்.டி.ஆர் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமா என்பது குறித்து பரிசீலிக்கும். அவ்வாறு அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டால், அதன் அளவு மற்றும் நடைமுறைகள் குறித்து இந்தக் குழு தீர்மானிக்கும்.
இதனால், மசோதா நிறைவேறியதாலேயே யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு உடனடியாக எம்.டி.ஆர் கட்டணம் விதிக்கப்படாது. தற்போது யுபிஐ பரிவர்த்தனைகள் பொதுமக்களுக்கு இலவசமாகவே தொடர்கின்றன.
மேலும், இந்த மசோதா டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மட்டுமின்றி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, உள்நாட்டு மின்னணு உற்பத்தியை ஊக்குவிப்பது, வெளிநாட்டு கிளவுட் சேவை நிறுவனங்கள் இந்திய தரவு மையங்களைப் பயன்படுத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வரி மற்றும் முதலீட்டு தொடர்பான மாற்றங்களையும் முன்மொழிகிறது.