ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பல ட்ரோன்கள் ஊடுருவ முயற்சி
ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக்கோட்டுக்கு அருகே கடந்த சில நாட்களில் பல முறை அடையாளம் தெரியாத ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாக பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. இந்த சந்தேகத்திற்கிடமான ட்ரோன் நடமாட்டத்தை தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

மாதிரி புகைப்படம்
இந்திய பாதுகாப்பு படையின் தகவலின்படி, ஜனவரி 11, 2026 அன்று டிரோன்களின் (Drone) இயக்கம் அதிகமாக இருந்ததாகவும், அவை ஆயுதங்கள் அல்லது போதைப்பொருட்களை கடத்த பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு, நவீன கண்காணிப்பு உபகரணங்கள் மூலம் எல்லைப் பகுதிகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஜம்மு காஷ்மீரின் நவுஷேரா பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் சார்ந்த ஒரு டிரோனை இந்திய ராணுவம் ஜனவரி 11, 2026 அன்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதே பகுதியில் மேலும் பல சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் வானில் பறந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தின் போது, இரவு வானில் டிரேசர் ரவுண்டுகள் ஒளிரும் காட்சிகள் தொடர்பான வீடியோவாக வெளியாகி, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் காட்சிகளை நினைவூட்டுவதாக இருந்தது. ராணுவத்தினர் மெஷின் கன்கள் பயன்படுத்தி டிரோன்களை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : 2 பிள்ளைகளை கழுத்தை நெருக்கி கொலை செய்த தந்தை.. தானும் விபரீத முடிவு.. தெலங்கானாவில் பகீர் சம்பவம்!
ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்
ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருட்கள் இந்திய எல்லைக்குள் வீசப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய, சம்பவ இடங்களில் ராணுவம் தீவிர தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, நேற்று பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர் திசையிலிருந்து வந்த ஒரு ட்ரோன், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா பகுதியில் ஆயுதங்களைக் கொண்ட பைகைகளை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நாளில் 5 டிரோன்கள் பறந்ததால் பரபரப்பு
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் ட்ரோன் ஊடுருவல்கள் கணிசமாக குறைந்திருந்த நிலையில், ஜனவரி 11, 2026 இன்று ஒரே நாளில் குறைந்தது ஐந்து ட்ரோன் ஊடுருவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது பாதுகாப்பு அமைப்புகளை மீண்டும் எச்சரிக்கை நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
பாகிஸ்தான், இந்திய எல்லைப் பகுதிகளில் செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு உதவுவதற்காக, ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்துவதாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த புதிய சம்பவங்களை தொடர்ந்து, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : சென்னைக்கு ஷாக்.. கடலில் மூழ்கும் அபாயம் என வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.. முழு விவரம்!
இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது. ஆபரேசன் சிந்தூருக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைதி நிலவிய நிலையில், டிரோன்கள் ஊடுருவ முயன்ற சம்பவம் மீண்டும் போர் சூழல் ஏற்படுமா என கேள்வியை எழுப்பியுள்ளது.