சபரிமலையில் ரோப் கார் சேவை விரைவில் தொடக்கம்…யார் யார் பயன்படுத்தலாம்!
Sabarimala Rope Car Service: சபரிமலையில் ரோப் கார் சேவை விரைவில் தொடங்க இருப்பதாகவும், இதற்காக 80 மரங்கள் வெட்டி அகற்றப்பட உள்ளதாகவும தேவசம்போர்டு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ரோப் கார் சேவையை யார் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

சபரிமலை ரோப் கார் சேவை
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இதில், கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் அதிக அளவிலான பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி கோவிலுக்கு வருவது வழக்கமாகும். அப்படி தரிசனத்துக்கு வரும் பக்தர்களில் சிலர் மலை ஏறுவதற்கு மிகவும் சிரமம் அடைகின்றனர். அவர்களை டோலி மூலம் மலைக்கு தொழிலாளர்கள் கொண்டு செல்கின்றனர். இதே போல, பம்பையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை மீது உள்ள சபரிமலை சன்னிதானத்திற்கு பூஜை பொருள்கள் உள்ளிட்டவை கொண்டு செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. முந்தைய காலங்களில் கழுதைகள் மூலம் இந்த பொருட்கள் அனைத்தும் சபரிமலை சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தன. தற்போது, டிராக்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
சபரிமலையில் ரோப் கார் சேவை தொடங்க திட்டம்
இந்த நிலையில், சபரிமலையில் ரோப் கார் சேவையை தொடங்குவதற்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது. அதன்படி, ரோப் கார் சேவை அமைப்பதற்காக பம்பை ஹில் டாப்பில் இருந்து சன்னிதானம் வரை சுமார் 2.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ. 271 கோடி மதிப்பீட்டில் கேபிள்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக காட்டுப்பகுதியில் 5 தூண்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும், இதற்கு இடையூறாக உள்ள சுமார் 80 மரங்கள் வெட்டி அகற்றப்பட உள்ளன. இதற்கு, வனவிலங்கு சரணாலய வாரிய கூட்டம் நடத்தி அனுமதி பெறப்பட உள்ளது.
மேலும் படிக்க: உங்கள் காரில் கிருஷ்ணர் சிலை வைக்க ஆசையா?.. அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க!!
மகரஜோதி நிகழ்வின் போது அடிக்கல்
இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள மகரஜோதியின் போது, ரோப் காருக்கான கேபிள்கள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இந்த ரோப் கார் சேவையின் மூலம் கோவிலுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டாலும், கோவிலுக்கு வரும் நோய் வாய்ப்பட்ட பக்தர்கள், மாற்றுத்திறனாளிகள், அவசர சிகிச்சை தேவைப்படுவோர் ஆகியோர் இதை உபயோகிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐயப்ப பக்தர்களுக்கு அறிவுறுத்தல்
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஆர். டி. ஓ. அருண் எஸ். நாயர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதில், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர், சிறுமிகள், முதியோர்கள் உள்ளிட்டோர் பெருவழிப்பாதை, புல் மேடு பாதைகளில் பயணிப்பதை தவிர்த்து, நிலக்கல் மற்றும் பம்பை வழியாக வர வேண்டும். ஏனென்றால் பெருவழிப்பாதை மற்றும் புல் மேடு பாதையில் மருத்துவ வசதி மீட்பு பணி உள்ளிட்டவை மேற்கொள்வதற்கு இடையூறு உள்ளன என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இனி lower berth தானாக கிடைக்கும்.. இந்திய ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு..