உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் ராஜினாமா.. பரபரப்புப் பின்னணி!!

Judge Sends Resignation: இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தார். அந்த அறையின் முழுமையான கட்டுப்பாடு நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரிடமே இருந்ததாக விசாரணைக் குழு தெரிவித்தது.

உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் ராஜினாமா.. பரபரப்புப் பின்னணி!!

நீதிபதி யஷ்வந்த் வர்மா

Updated On: 

10 Apr 2026 13:50 PM

 IST

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வந்த யஷ்வந்த் வர்மா தனது பதவியை இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த இவர், அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: ஹோர்முஸை கடந்து இந்தியாவுக்கு வந்த கப்பல் கிரீன் ஆஷா.. 11 நாட்களுக்கான கேஸ் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது!

ராஜினாமாவுக்கான காரணம்:

கடந்த ஆண்டு யஷ்வந்த் வர்மா டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, அவரது வீட்டில் திடீரென நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அவரது வீட்டிலிருந்து கட்டுக்கட்டாகப் பணம் சிக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. பணம் சிக்கிய விவகாரத்தைத் தொடர்ந்து, நீதிபதி யஷ்வந்த் வர்மாவைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன. இந்த அரசியல் அழுத்தம் மற்றும் சர்ச்சைகளின் பின்னணியில், அவர் தனது ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கியுள்ளார்.

பல கோடி ரூபாய் பணம்:

இந்த விவகாரம் கடந்த ஆண்டு மார்ச் 14, 2025 அன்று தொடங்கியது. டெல்லியின் டியூக்லக் கிரசண்ட் பகுதியில் உள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அரசு இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர், வீட்டின் ஒரு அறையில் எரிக்கப்பட்ட மற்றும் பாதி எரிந்த நிலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உச்சநீதிமன்ற விசாரணை:

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தார். அந்த அறையின் முழுமையான கட்டுப்பாடு நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரிடமே இருந்ததாக விசாரணைக் குழு தெரிவித்தது. இந்த விசாரணையின் போது நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் இருந்த நீதித்துறை பணிகள் பறிக்கப்பட்டன. அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

இதையும் படிக்க: ஓடும் ரயிலில் குழந்தை பெற்றெடுத்த பெண்.. கேரளத்தில் சுவாரஸ்ய சம்பவம்!

யஷ்வந்த் வர்மா தரப்பு விளக்கம்:

தீ விபத்து நடந்த போது தான் டெல்லியில் இல்லை என்றும், தனது இல்லத்தின் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் தவறிழைத்திருக்கலாம் என்றும் நீதிபதி தரப்பில் கூறப்பட்டது. அந்தப் பணத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இது ஒரு சதி என்றும் அவர் மறுத்து வந்தார். இந்த விவகாரத்தில் நீதிபதி பதவி விலக மறுத்ததால், அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 146 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 63 மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். நாடாளுமன்றக் குழுவின் விசாரணை தீவிரமடைந்த நிலையில், அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?