2 மாதங்களில் 15 ஷோகாஸ் நோட்டீஸ்.. விமானத்தில் இருந்த இஞ்சின் கோளாறு.. வெளியான ஷாக் ரிப்போர்ட்..
Air India Plane Crash: நேற்று ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக விமானத்தில் இருக்கக்கூடிய சில பாகங்கள் தொடர்ந்து சேதமடைந்த நிலையில் அவை மாற்றப்பட்டாலும் இன்ஜின்கள் மாற்றப்படாமல் போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்ததாக தெரியவந்துள்ளது

நேற்றைய தினம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (Air India Plane) ஓடுதலத்தில் இருந்து புறப்பட்ட மூன்று நிமிடங்களிலேயே தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் தற்போது ஏர் இந்தியா விமான விபத்திற்கான முக்கிய காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது. ஏர் இந்தியாவின் பழுதடைந்த விமானம் 2024 டிசம்பரில் ஒரு பெரிய தொழில் நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. கடந்த காலங்களில் ஏர் இந்தியா பாதுகாப்பு நெறிமுறைகளை மீண்டும் மீண்டும் புறக்கணித்தது தொடர்பான விஷயங்களும் தற்போது வெளியாகி உள்ளது.
ஏர் இந்தியாவிற்கு ஷோ காஸ் நோட்டீஸ்:
தனியார் செய்து தொலைக்காட்சியான ரிபப்ளிக் வெளியிட்ட ஆவணங்கள் ஜூன் 3 மற்றும் ஜூன் 5 ஆகிய தேதிகளில் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஷோகாஸ் (show cause) நோட்டீஸ்களை வழங்கியதை வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏர் இந்தியாவில் இருக்கக்கூடிய பல விமானங்களில் விமான தகுதி மற்றும் பராமரிப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. இருப்பினும் இந்த ஷோகாஸ் நோட்டீஸிற்கு ஏர் இந்தியா விமானம் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கே தாசுக்கு அனுப்பப்பட்ட அந்த அறிவிப்பில் ஏர் இந்தியா நிறுவனம் காலாவதியான அவசர உபகரணங்களுடன் விமானங்களை தொடர்ந்து இயக்கியதாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் ஏர் இந்தியா நிர்வாகத்தின் தரப்பில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்காட்டுகிறது. ஏர் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட ஷோகாஸ் நோட்டீஸில் ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் கேம்பல் வில்சனின் பெயரும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
விமானத்தில் இருந்த ஹைட்ராலிக் ஃபெய்லியர்:
விமானத்தில் இருக்கக்கூடிய சில பாகங்கள் தொடர்ந்து சேதமடைந்த நிலையில் அவை மாற்றப்பட்டாலும் இன்ஜின்கள் மாற்றப்படாமல் போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதுபோக முக்கியமாக விமானத்தில் ஏற்கனவே ஹைட்ராலிக் ஃபெய்லியர் மற்றும் இஞ்சின் தொழில்நுட்பக் கோளாறு இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஏர் இந்தியாவின் லண்டன் விமானத்தில் நடு வானில் இஞ்சின் கோளாறு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது
நேற்று நடந்த இந்த விமான விபத்தில் ஏர் இந்தியா பாதுகாப்பு அம்சங்களை புறக்கணித்து 242 பயணிகளின் உயிருடன் விளையாடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விமானத்தில் தோராயமாக 58 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் இருந்ததாகவும் விமானம் விபத்துக்குள்ளான போது தீப்பற்றி எரிந்ததற்கு இது முக்கிய காரணமாகவும் கருதப்படுகிறது.
இதுவரை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 15 ஷோகாஸ் நோட்டீஸ்கள் கடந்த இரண்டு மாதங்களில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ஒரு சிறப்பு விசாரணை குழு அமைத்து நிர்வாக இயக்குனர் கேம்பல் வில்சனை நேரில் ஆஜர் படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையில் இந்த துயர சம்பவம் குறித்து ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ” அனைத்து அவசர கால மீட்பு முயற்சிகளிலும் நாங்கள் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். கூடுதல ஆதரவை வழங்க ஏர் இந்தியாவை சேர்ந்த பராமரிப்பாளர்களின் சிறப்புக் குழு அகமதாபாத்திற்கு செல்கிறது. இந்த நேரத்தில் எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது