தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல்… தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை!!
தேர்தல் அலுவலர்கள் நண்பர்களாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டும். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தேர்தல் ஆணையரின் உத்தரவுகளை முறையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஜனநாயக மாண்பை பாதுகாக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் முன்கூட்டியே வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் ஆலோசனை
டெல்லி, பிப்ரவரி 06: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நேர்மையான வகையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் பார்வையாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் 3 மாநிலங்கள் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களாக உள்ளன. 3 மாநிலங்களிலும் பாஜக தனது செல்வாக்கை அதிகரிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதன் காரணமாகவே இந்த தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: “125 நாட்கள் வேலை திட்டத்தை சீர்குலைப்பதா?”.. திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.13ல் அதிமுக ஆர்ப்பாட்டம்..
அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம்:
இந்த நிலையில், இந்த தேர்தல்களில் பார்வையாளர்களாக நியமிக்கப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பொதுப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட 714 பேர், போலீஸ் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட 223 பேர், தேர்தல் செலவு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட 497 பேர் என மொத்தம் 1,434 அதிகாரிகள் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள் சுக்பிர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.
வெளிப்படையாக தேர்தல் நடக்க வேண்டும்:
இந்த கூட்டத்தில் ஞானேஷ்குமார் மற்றும் ஆணையாளர்கள் பேசியதாவது, சுதந்திரமான, நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் அலுவலர்கள் நண்பர்களாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டும். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தேர்தல் ஆணையரின் உத்தரவுகளை முறையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஜனநாயக மாண்பை பாதுகாக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் முன்கூட்டியே வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
மேலும் படிக்க: தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகள்.. இனி மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம் – தவெக வெளியிட்ட அறிவிப்பு..
உடனடி நடவடிக்கை வேண்டும்:
பின்னர் தேர்தல் பார்வையாளர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு அவர்கள் பதிலளித்தனர். தேர்தல் ஆணையத்தின் சட்டங்கள், விதிகள், உத்தரவுகளை பார்வையாளர்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் ஆகியோர் எளிதில் அணுகக்கூடியவர்களாக பார்வையாளர்கள் இருக்க வேண்டும். வாக்காளர்களின் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் சென்று பார்த்து, அங்கு வாக்காளர்களுக்கான குறைந்தபட்ச வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்ய வேண்டும் போன்ற அறிவுரைகளை பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையர்கள் வழங்கினர்.