‘தீவிரமெடுக்கும் எபோலா வைரஸ் பரவல்’.. இந்த நாடுகளுக்கு அவசியமின்றி பயணிப்பதை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்!
Ebola outbreak: 'பன்டிபூகியோ' என்ற கடுமையான உருமாறிய எபோலா வைரஸால் ஏற்படும் இந்த ரத்தப்போக்கு காய்ச்சல் மிக அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டதாகும். இந்த வைரஸ் பாதிப்பைத் தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ இதுவரை எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது மருந்துகளோ கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ‘பன்டிபூகியோ’ (Bundibugyo) வகை எபோலா வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாகப் பரவி வருவதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு (WHO) சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC), உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய மூன்று நாடுகளுக்கு இந்தியக் குடிமக்கள் தங்களின் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அவசரப் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதையும் படிக்க: பெங்களூரில் ஏர் இந்தியா விமானம் விபத்து… “டெய்ல் ஸ்ட்ரைக்” குறித்து பரபரப்பு தகவல்!
சர்வதேச பொது சுகாதார அவசரநிலை:
காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, உலக சுகாதார அமைப்பு (WHO), சர்வதேச சுகாதார விதிகளின் கீழ், கடந்த மே 17, 2026 அன்று இச்சூழலை “சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலை” என அறிவித்தது. இதேபோல், ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் காங்கோ மற்றும் உகாண்டாவில் ஏற்பட்டுள்ள இந்த எபோலா பரவலை ஆப்பிரிக்கக் கண்டத்தின் பாதுகாப்பிற்கான பொது சுகாதார அவசரநிலையாக வகைப்படுத்தியுள்ளது.
எல்லையோரக் கண்காணிப்பு தீவிரம்:
உலக சுகாதார அமைப்பின் அவசரக் குழு கடந்த மே 22 அன்று அளித்த பரிந்துரையின்படி, எபோலா வைரஸ் கண்டறியப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் பயணிகளைக் கண்காணிக்க நுழைவு வாயில்களில் (விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள்) தீவிர நோய் கண்காணிப்பை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்குக் காரணமே இல்லாமல் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்களைக் கண்டறிந்து, பரிசோதித்து, தனிமைப்படுத்தி நிர்வகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளின் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை:
தற்போது இந்த ஆப்பிரிக்க நாடுகளில் வசித்து வரும் அல்லது அங்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் குடிமக்கள், உள்ளூர் பொது சுகாதார அறிவுறுத்தல்களைத் தீவிரமாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தூய்மையைப் பேணவும், கூடுதல் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எபோலா நோய்க்கான அறிகுறிகள் உள்ள நபர்களுடன் நேரடித் தொடர்புகொள்வதைத் தவிர்க்க வேண்டும். காய்ச்சல் அல்லது அது தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
எபோலாவின் வீரியம் மற்றும் பாதிப்பு நிலவரம்:
‘பன்டிபூகியோ’ என்ற கடுமையான உருமாறிய எபோலா வைரஸால் ஏற்படும் இந்த ரத்தப்போக்கு காய்ச்சல் மிக அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டதாகும். மிகக் கொடுமையாக, இந்த குறிப்பிட்ட பன்டிபூகியோ எபோலா வைரஸ் பாதிப்பைத் தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ இதுவரை எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது குறிப்பிட்ட மருந்துகளோ கண்டறியப்படவில்லை என இந்த ஆலோசனை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையின்படி, காங்கோ நாட்டின் மூன்று மாகாணங்களில் இதுவரை 867 சந்தேகிக்கப்படும் பாதிப்புகளில் 204 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கு முன்னதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையில் 750 சந்தேகிக்கப்படும் பாதிப்புகளும், 177 மரணங்களும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: திடீர் ட்ரெண்டான கரப்பான்பூச்சி கட்சி.. சோஷியல் மீடியாவில் குவியும் ஆதரவாளர்கள்.. என்ன நடந்தது?
இந்தியாவில் தற்போதைய நிலை:
இந்தியாவில் இதுவரை ‘பன்டிபூகியோ’ வகை எபோலா வைரஸ் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி, ஆப்பிரிக்காவில் மாறி வரும் இந்தச் சூழ்நிலையை இந்திய அரசு மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.