Ahmedabad Plane Crash: மருத்துவ கல்லூரி விடுதியில் மோதல்.. வெடித்து சிதறிய ஏர் இந்தியா விமானம்.. 20 மாணவர்கள் உயிரிழப்பு என தகவல்!

BJ Medical College Hostel: அகமதாபாத்திலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. 242 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் இருந்தனர். விபத்தில் பல மாணவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Ahmedabad Plane Crash: மருத்துவ கல்லூரி விடுதியில் மோதல்.. வெடித்து சிதறிய ஏர் இந்தியா விமானம்.. 20 மாணவர்கள் உயிரிழப்பு என தகவல்!

மருத்துவ கல்லூரி விடுதி பாதிக்கப்பட்ட காட்சி

Updated On: 

12 Jun 2025 17:00 PM

அகமதாபாத், ஜூன் 12: அகமதாபாத்தில் 242 பேருடன் பயணித்த ஏர் இந்தியா விமானம் (Air India Plane Crash) விபத்துக்குள்ளான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் (Sardar Vallabhbhai Patel International Airport) இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மேகனா நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் (BJ Medical College) யுஜி விடுதியில் மோதி வெடித்து சிதறியது. இதன் காரணமாக, அந்த விடுதியில் தங்கியிருந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விமான விபத்து குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை அதிகாரிகள் விளக்கம்:

இந்த விபத்து குறித்து குஜராத் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ முதலில் லண்டனுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பிறகு காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் 2 முதல் 3 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு சென்றன. அனைத்து படையினரின் முயற்சியால், தற்போது வரை மீட்பு பணியானது 70-80 சதவீதம் நடந்துள்ளது” என்று தெரிவித்தார்.

விடுதியில் விபத்து நடந்தபிறகு வெளியான காட்சிகள்:

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தவர்கள் யார்..?

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 2025 ஜூன் 12ம் தேதி பிற்பகல் 1.39 மணிக்கு 2 விமானிகள், 10 கேபின் பணியாளர்கள் மற்றும் 242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. விமானத்தில் இருந்த 242 பேரில் 169 இந்தியர்கள் என்றும், 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என்றும், போர்ச்சுகலை சேர்ந்த 7 பேரும், கனடாவை சேர்ந்த ஒருவரும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஏர் இந்தியா விமானத்தை விமானி சுமித் சபர்வால் ஓட்டியதாகவும், இவருக்கு துணையாக விமானத்தின் முதல் அதிகாரி பைலட் கிளைவ் குந்தரும் இருந்துள்ளனர். சுமித் சபர்வாலுக்கு 8,200 மணிநேர விமான பயண அனுபவமும், துணை விமானியாக குந்தருக்கு 1,100 மணிநேர விமானப் பயண அனுபவம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.