வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம்.. ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது சினிமா பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது எனவும், பல்வேறு தலைமுறைகளை கவர்ந்த நடிப்பு எனவும் பாராட்டியுள்ளார். இப்படியான நிலையில் ரஜினி நடிப்பில் வெளியான கூலி படம் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவில் அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். மேலும் ரஜினியின் நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியும், ரஜினியும் இணைந்திருக்கும் புகைப்படமும் அதில் இடம் பெற்றிருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பிரதமர் வெளியிட்ட பதிவு
திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது… pic.twitter.com/WUk1nl6Squ
— Narendra Modi (@narendramodi) August 15, 2025
சினிமாவில் 50 ஆண்டுகள்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அவர் சினிமாவில் அறிமுகமானார். தனது ஸ்டைலான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்தார். சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரானார். தமிழ் சினிமா மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களிலும் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். 171 படங்களில் நடித்துள்ள அவருக்கு 2025 ஆம் ஆண்டு சினிமாவில் 50வது ஆண்டாகும்.
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நம்பர் 1 நடிகராக திகழும் ரஜினிகாந்த் தயாரிப்பாளர், பாடகர் என பிற துறைகளிலும் தனது திறமைகளை நிரூபித்துள்ளார். 74 வயதை கடந்த நிலையில் இன்றளவும் இந்திய சினிமாவின் மிகவும் மதிப்புமிக்க நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு உலக நாடுகளிலும் பிற மொழி பேசும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ரஜினிகாந்த் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். நன்றி தெரிவித்து ரஜினியும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ரசிகர்களை கவர்ந்த கூலி
ரஜினியின் திரையுலக பொன்விழா ஆண்டை மேலும் சிறப்பிக்கும் பொருட்டு ஆகஸ்ட் 14ம் தேதி அவர் நடித்த கூலி படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ருதி ஹாசன், சௌபின் சாஹிர், அக்கினேனி நாகார்ஜூனா, உபேந்திரா, ஆமீர்கான், சத்யராஜ் என பலரும் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தாலும் வசூலில் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.