Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அஜந்தா – எல்லோரா சர்வதேச திரைப்பட விழா.. பத்மபாணி விருது பெறும் இளையராஜா

Padmapani Award To Ilaiyaraaja: மேற்கத்திய இசை வடிவங்களையும், இந்திய பாரம்பரிய சங்கீதத்தையும் ஒருங்கிணைத்து புதிய இசை மொழியை உருவாக்கியவர் என்ற பெருமையும் இளையராஜாவுக்கே உரியது. இந்திய சினிமாவில் பின்னணி இசைக்கு தனி அடையாளம் வழங்கியவராகவும் அவர் போற்றப்படுகிறார். இந்நிலையில், 2026 இல் பத்மபாணி விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜந்தா – எல்லோரா சர்வதேச திரைப்பட விழா.. பத்மபாணி விருது பெறும் இளையராஜா
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Jan 2026 10:22 AM IST

ஜனவரி 20, 2026: புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு, வரவிருக்கும் அஜந்தா–எல்லோரா சர்வதேச திரைப்பட விழா (AIFF) 2026 இல் பத்மபாணி விருது வழங்கப்பட உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழா, ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை மகாராஷ்டிர மாநிலத்தின் சத்திரபதி சம்பாஜிநகர் நகரில் நடைபெற உள்ளது. ஜனவரி 28 அன்று நடைபெறும் தொடக்க விழாவில், தேசிய மற்றும் சர்வதேச கலைஞர்கள், திரைப்படத் துறையைச் சேர்ந்த முன்னணி ஆளுமைகள், கலாச்சார மற்றும் கலைத் துறையின் முக்கிய பிரமுகர்கள், திரைப்பட ரசிகர்கள் முன்னிலையில் இளையராஜாவுக்கு இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்கான தேர்வுக் குழுவில், திரைப்பட விமர்சகர் லதிகா பட்கோங்கார் (தலைவர்), புகழ்பெற்ற இயக்குநர் அசுதோஷ் கோவாரிகர், திரைப்பட தயாரிப்பாளர் சுனில் சுக்தாங்கர் மற்றும் இயக்குநர் சந்திரகாந்த் குல்கர்னி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த விருதின் ஒரு பகுதியாக, இளையராஜாவுக்கு பத்மபாணி நினைவுச் சின்னம், மரியாதைச் சான்றிதழ் மற்றும் ரூபாய். 2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இதற்கு முன் இந்த விருதைப் பெற்றவர்களில் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், மூத்த இயக்குநர்–எழுத்தாளர் சாய் பரஞ்ச்ப்யே, மறைந்த நடிகர் ஓம் பூரி உள்ளிட்ட இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க: ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் இல்லனா பரவாயில்லை… யூடியூபில் இந்த 8 A.M. மெட்ரோ படத்தை மிஸ் செய்யாதீர்கள்!

ஐந்து தசாப்தங்களுக்கு மேலான தனது இசைப் பயணத்தில், இளையராஜா 7,000-க்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் 1,500-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் அவர் உருவாக்கிய இசை, மொழி எல்லைகளைத் தாண்டி ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளது.

மேற்கத்திய இசை வடிவங்களையும், இந்திய பாரம்பரிய சங்கீதத்தையும் ஒருங்கிணைத்து புதிய இசை மொழியை உருவாக்கியவர் என்ற பெருமையும் இளையராஜாவுக்கே உரியது. இந்திய சினிமாவில் பின்னணி இசைக்கு தனி அடையாளம் வழங்கியவராகவும் அவர் போற்றப்படுகிறார்.

மேலும் படிக்க: நாயகன்கள் அப்படி செய்யும்போது வருத்தமாக உள்ளது – நடிகை பாவனா ஓபன் டாக்

இந்த திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, போட்டி மற்றும் போட்டியற்ற பிரிவுகளில் சுமார் 70 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்களுக்கான சிறப்பு காட்சிகள், கலந்துரையாடல்கள், இயக்குநர்கள்–கலைஞர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.

இளையராஜாவுக்கு வழங்கப்படும் இந்த பத்மபாணி விருது, அவரது இசைப் பங்களிப்புகளுக்கும், இந்திய மற்றும் உலக சினிமாவில் அவர் ஏற்படுத்திய தாக்கத்திற்கும் கிடைக்கும் மற்றொரு முக்கிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.