சட்டமன்றத் தலைவராக பதவியேற்றார் ஜே.சி.டி.பிரபாகர்.. துணைத் தலைவரானார் எம்.ரவி சங்கர்!
Tamil Nadu Speaker Jcd Prabhakar: தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக ஜே. சி. டி. பிரபாகர் என்பவரும், துணை சபாநாயகராக எம். ரவி சங்கர் என்பவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை முன்னின்று நடத்தினார்.

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அத்துடன் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை அடைவதற்கு விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 9 எம் எல் ஏக்கள் அமைச்சராக பொறுப்பேற்றனர். இதைத் தொடர்ந்து, நேற்று திங்கள்கிழமை ( மே 11- ஆம் தேதி) தமிழக சட்டப் பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏவான கருப்பையா என்பவர் தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 232 சட்டமன்ற உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக உறுதி மொழி ஏற்று பதவி ஏற்று கொண்டனர். பின்னர், தமிழக சட்டப்பேரவைக்கு நிரந்தர சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை நியமனம் செய்வதற்கான பணிகள் தொடங்கியது.
போட்டியின்றி தேர்வான சபாநாயகர் – துணை சபாநாயகர்
அதன்படி, தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏவான ஜே. சி. டி. பிரபாகர் துணை சபாநாயகராக எம். ரவிசங்கர் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த பதவிகளுக்கு மற்ற கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் மனுக்களை தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக, ஜே. சி. டி. பிரபாகர் மற்றும் எம். ரவிசங்கர் ஆகியோர் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக தற்காலிக சபாநாயகர் கருப்பையா அறிவித்தார். இதை தொடர்ந்து, ஜே. சி. டி. பிரபாகரை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
துணை சபாநாயகர் தேர்வு – பதவி ஏற்பு
இதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையின் துணைத் தலைவர் தேர்வு நடைபெற்றது. இதனை, சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர் நடத்தினார். அப்போது, துணை சபாநாயகர் பதவிக்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஆதரவாக முதல்வர் விஜய் முன்மொழிந்திருந்தார். அவை முன்னவரான கே. ஏ. செங்கோட்டையன் வழிமொழிந்திருந்தார். இதை தொடர்ந்து, துணை சபாநாயகர் பதவிக்கு ரவிசங்கர் ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்த காரணத்தால் அவர் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்படுவதாக சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர் தெரிவித்தார். அதன்படி, ரவிசங்கர் துணை சபாநாயகர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.