நாம் வளரக்கூடாது என நினைக்கிறார்கள் – தொண்டர்களுக்கு திருமாவளவன் வெளியிட்ட வீடியோ
திமுக கூட்டணியில் விசிகவிற்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அது அந்த கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், பெரிய கூட்டணி என்பதால் பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தொல்.திருமாவளவன்
சென்னை, மார்ச் 21 : பெரிய கூட்டணி என்பதால் பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தேர்தலில் போட்டியிட மார்ச் 21, 2026 அன்று விருப்பமனு வாங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் விசிகவிற்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அக்கட்டியின் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியினருக்கு திருமாவளவன் அறிவுரை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது விருப்பமனுக்கான கட்டணம் செலுத்தவிருக்கும் தோழர்கள் குழப்பமடைய தேவையில்லை. முடிந்தால் டிடியோடு வாருங்கள். இல்லை என்றால் கட்டணத்துடன் வந்து செலுத்துங்கள். பணம் செலுத்தினால் நேர்காணல் நடக்கும் நேர்காணல் நடந்தால் தொகுதி கிடைக்கும் என்கிற நிலை இல்லை. மக்கள் நல கூட்டணியில் இருந்தபோது 25 தொகுதிகளில் போட்டியிட்டோம். அப்போது நான் சுதந்திரமாக முடிவெடுக்க முடிந்தது.
இதையும் படிக்க : திருச்சி கிழக்கு தொகுதிக்கு மும்முனை போட்டி… மதிமுகவின் பலே திட்டம்… எந்த கட்சிக்கு ஒதுக்கும் திமுக!
எல்லோருக்கும் வாய்ப்பளிக்க முடிந்தது. பத்துக்கும் கீழே மிக சொற்பமான இடங்களை பெறுகிறபோது, நீண்ட காலம் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தந்த தொகுதியை சேர்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது மிக முக்கியமான கருத்தாக இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் நாம் அதனை எதிர்கொள்கிறோம். அரக்கோணத்தில் ஏன் தோற்றோம் கேட்டபோது திமுக தரப்பில் சொன்ன கருத்து, நீங்கள் வெளியில் இருந்து போட்டியிட ஆளை கூட்டி வந்தீர்கள். உள்ளூரை சேர்ந்தவரை நீங்கள் போடவில்லை என்ற கருத்து சொல்லப்பட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால் நாம் போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்த வேட்பாளர்களை தான் போட்டியிட வைத்தோம். அதில் 4 இடங்களில் நம்மால் வெற்றி பெற முடிந்தது. 2 இடங்களில் மிக சொற்பமான இடங்களில் மட்டுமே இழந்தோம். இதனால் வேட்பாளர்களை தேர்வு செய்கிற போது, கட்சி தலைமைக்கு நெருக்கடி இல்லாத வகையில் சுதந்திரமாக முடிவெடுக்கக் கூடிய வாய்ப்பை இயக்க தோழர்கள் வழங்க வேண்டும். மிக எளிதாக சந்திக்க கூடிய ஒருவனாக நான் இருப்பதனால், என்னை நேரடியாக சந்தித்து நெருக்கடிக்குள்ளாக்குகின்ற நிலை தொடர்கிறது.
இதையும் படிக்க : 23ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.. எங்கே தெரியுமா?
‘நாம் வளரக்கூடாது என நினைக்கிறார்கள்’
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் தலைவரை சந்தித்து இந்த அழுத்தம் தர யாராலும் முடியாது. எந்த கட்சியலும் இது நடக்காது. நம்முடைய கட்சியில் கட்சி தலைவர் என்ற முறையில் தொகுதிகளை எப்படி போராடி பெறுகிறேனோ, அந்த அளவுக்கு போராடி நிதியை பெற்றாக வேண்டிய நிலை. நெருக்கடிகளுக்கு இடையில் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற பணி சுமையும் இருக்கின்றன
இந்த அரசியல் களமும் சமூக சூழலும் நமக்கு சாதகமாக இல்லை. நாம் எந்த வகையிலும் வளரக்கூடாது மற்றும் வலிமைப் பெறக்கூடாது என நினைப்பவர்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம். நாம் வளர வேண்டும் என்று வாழ்த்தவோ, ஊக்கப்படுத்தவோ இங்கு யாரும் இல்லை என்பதே எதார்த்தமான உண்மை என்று பேசினார்.