“கரூரில் இருந்து செந்தில் பாலாஜி தொகுதி மாறியது ஏன்?” மக்களுக்கும் புரியும்.. தவெக சராமாரி கேள்வி..
Tamilnadu Assembly Election: செந்தில் பாலாஜிக்குச் சிபிஐ சம்மன் அனுப்பியதற்கும், அவர் அவசரமாகத் தொகுதி மாறியதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். கரூரில் மக்கள் பாதிக்கப்பட்டபோது அவர்களைப் பார்க்கச் செல்லாமல், தற்போது தொகுதி மாறி கோவைக்கு வந்திருப்பது ஏன்? என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

செந்தில் பாலாஜி, அருண் ராஜ்
Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் உச்சகட்ட சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த முறை விஜய் அரசியல் வருகையால், நான்குமுனை போட்டியாக களம் மாறியுள்ளது. இதனால், தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவிலான எதிர்பார்ப்பு தேர்தல் மீது எழுந்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகையால், எந்த கட்சிக்கு பாதிப்பு ஏற்பட உள்ளது. எந்த கட்சியின் வாக்கை அவர் பிரிக்கப்போகிறார். இளைஞர்கள் வாக்குகளை மொத்தமாக கவருவாரா? போன்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்திற்கு பின் நாடு முழுவதும் விஜய்யின் அரசியல் வருகை கவனம் பெற்றது. இந்த சம்பவத்தில் திமுகவின் செந்தில் பாலாஜி மீது தவெகவினர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வந்தனர்.
இதையும் படிக்க: தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரச்சாரம் மீண்டும் ரத்து.. ஏமாற்றத்தில் மக்கள்..
செந்தில் பாலாஜி தொகுதிய மாறியது ஏன்?
இந்த சூழ்நிலையில், திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான செந்தில் பாலாஜி, தனது கோட்டையான கரூரிலிருந்து மாற்றப்பட்டு கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தான் தொகுதி மாறியது குறித்துப் பேசிய செந்தில் பாலாஜி, “நான் கரூர் தொகுதியைத்தான் தலைமையிடம் கேட்டிருந்தேன். ஆனால், எந்தத் தொகுதியில் யார் போட்டியிட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் தான். 2019-ல் அரவக்குறிச்சி, 2021-ல் கரூர் என வாய்ப்பளித்த தலைவர், தற்போது 2026 தேர்தலில் கோவையில் போட்டியிட ஆணையிட்டுள்ளார். ஒரு தொண்டனாகத் தலைமையின் கட்டளையை ஏற்று இங்குப் போட்டியிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
எதிர்தரப்பின் சரமாரி கேள்விகள்:
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் இந்தத் தொகுதி மாற்றத்தை எதிர்த்தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, கரூர் தொகுதியில் நிலவும் சில விவகாரங்கள் மற்றும் மக்கள் பாதிப்புகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, செந்தில் பாலாஜி அதனைத் தவிர்த்துப் பேசியது சர்ச்சையானது. இது குறித்துப் பேசிய தவெக வேட்பாளர் அருண் ராஜ் பின்வரும் கேள்விகளை முன்வைத்தார்.
ஏன் சிபிஐ சம்மன் அனுப்பியது?:
செந்தில் பாலாஜிக்குச் சிபிஐ சம்மன் அனுப்பியதற்கும், அவர் அவசரமாகத் தொகுதி மாறியதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். கரூரில் மக்கள் பாதிக்கப்பட்டபோது அவர்களைப் பார்க்கச் செல்லாமல், தற்போது தொகுதி மாறி கோவைக்கு வந்திருப்பது ஏன்? என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். “செந்தில் பாலாஜி ஏன் தொகுதி மாறினார் என்பது மக்களுக்கும் புரியும், உங்களுக்கும் புரியும்” என்று அவர் சூசகமாகத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: காரைக்குடியில் சைக்கிளில் பிரச்சாரம் செய்த விஜய்.. பேசாமல் போனதால் மக்கள் ஏமாற்றம்..
அரசியல் வியூகம்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் திமுகவின் செல்வாக்கை உயர்த்தவும், வலுவான எதிர்க்கட்சிகளைச் சமாளிக்கவும் செந்தில் பாலாஜியைத் தலைமை அங்கு இறக்கியுள்ளதாக ஒரு தரப்பு கூறினாலும், கரூரில் நிலவும் சில சட்டச் சிக்கல்களே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று மற்றொரு தரப்பு விமர்சித்து வருகிறது. செல்வாக்கு மிக்க அமைச்சராகக் கருதப்படும் செந்தில் பாலாஜி, புதிய தொகுதியான கோவையில் மக்களின் ஆதரவைப் பெற்றுத் தனது பலத்தை நிரூபிப்பாரா அல்லது எதிர்த்தரப்பின் புகார்கள் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்துமா என்பது தேர்தல் முடிவிலேயே தெரியவரும்.