சொத்து மதிப்பை குறைத்து காட்டிய விஜய்?.. வேட்பு மனுவில் மீண்டும் குளறுபடி?..
Tamilnadu Assembly Election: குறிப்பாக, கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின்போது, அவர் இந்தப் பேருந்தில்தான் அங்கு சென்றிருந்தார். அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட பிறகு, அவர் அந்தப் பேருந்தைத் தற்போது பயன்படுத்துவதில்லை. வேறு வாகனத்தையே பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தி வருகிறார்.

விஜய் வேட்பு மனுத் தாக்கல்
Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடுகிறார். அந்தவகையில், தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல்நாளே விஜய் பெரம்பூரில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து, பெரம்பூர் தொகுதியில் இருந்து தனது அனல் பறக்கும் பிரச்சாரத்தையும் அவர் தொடங்கினார். அன்றைய தினமே கட்டங்கடங்காத கூட்டத்தால் வில்லிவாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் அவர் மேற்கொள்ள இருந்த பிரச்சாரங்கள் ரத்து செய்யப்பட்டன. அந்தளவுக்கு குறுகிய சாலைகளில் அவரது வாகனத்தை முண்டியடித்துக்கொண்டு ரசிகர்கள் கூட்டம் திரண்டிருந்தது. இதை தொடர்ந்து, அவர் பெரம்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிக்க: “வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட கருணாநிதி?”.. ஆ.ராசா ஆடியோ விவகாரத்தை கையில் எடுத்த இபிஎஸ்.. அதிமுக ஆட்சியில் செக்!
வேட்புமனுவில் இருந்த முரண்பாடுகள்:
இதைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஏப்ரல் 2ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில், கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது போலீசார் பதிவு செய்த வழக்கு மற்றும் மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டின் போது பதியப்பட்ட வழக்கு ஆகியவற்றை குறிப்பிட்டிருந்தார். இதில், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மதுரை மாநாட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விஜய் குறிப்பிடவில்லை. இதனால், உண்மைக்கு மாறான தகவலை விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்ததாகவும், இதனால் அவரது வேட்ப மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல்:
இந்த நிலையில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சார்பில் திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் சிவா நேற்று (ஏப்ரல் 4) தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பித்தார். இதில் அவரது அசையும் சொத்துக்களின் மதிப்பில் 6 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் தனது அசையும் சொத்துக்களின் மதிப்பு 404 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், நேற்றை தினம் பெரம்பூரில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அசையும் சொத்துக்களின் மதிப்பு 410 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார்.
விடுப்பட்ட பிரச்சார வாகனத்தின் மதிப்பு:
இந்த 6 கோடி ரூபாய் வித்தியாசம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆராய்ந்தபோது, அவர் தனது பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தும் டாட்டா கேரவன் பேருந்தை முந்தைய கணக்கில் காட்டவில்லை என்பது தெரியவந்தது. தற்போது தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், அந்தப் பிரச்சாரப் பேருந்தின் மதிப்பு 6 கோடி ரூபாய் என்பதைக் குறிப்பிட்டுள்ளதால், அவரது மொத்த அசையும் சொத்து மதிப்பு 410 கோடியாக உயர்ந்துள்ளது.
பிரச்சாரப் பேருந்தின் பின்னணி:
விஜய் கட்சி தொடங்கிய காலத்தில் மாவட்டந்தோறும் பிரச்சாரம் செய்ய இந்த டாட்டா கேரவன் பேருந்தையே பயன்படுத்தினார். குறிப்பாக, கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின்போது, அவர் இந்தப் பேருந்தில்தான் அங்கு சென்றிருந்தார். அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட பிறகு, அவர் அந்தப் பேருந்தைத் தற்போது பயன்படுத்துவதில்லை. வேறு வாகனத்தையே பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தி வருகிறார். நிறுத்தப்பட்டிருந்த அந்தப் பேருந்தின் மதிப்பையே இப்போது தனது சொத்துக் கணக்கில் சேர்த்துள்ளார்.
அடுத்தகட்ட நடவடிக்கை:
பெரம்பூர் தொகுதியில் சொத்து விவரங்களைத் திருத்தி மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியிலும் அதே போன்ற ஒரு கூடுதல் பிரமாணப் பத்திரத்தை விஜய் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இரண்டு தொகுதிகளிலும் அவர் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் மற்றும் வழக்கு விவரங்கள் ஒரே மாதிரியாக அமையும்.
இதையும் படிக்க: “திருமாவளவன் துணை முதல்வர் பதவி கேட்கத் திட்டம்”.. பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை!!
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தகவல்களில் முரண்பாடு இருப்பதைத் தவிர்க்கவே இந்தத் திருத்தப்பட்ட மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜய்யின் மொத்த அசையும் சொத்து மதிப்பு 410 கோடி ரூபாய் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது.