மதுரை, பிப்ரவரி 21, 2026: திமுக சார்பில் இன்று மதுரையில் தென் மண்டல திமுக தேர்தல் முகவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரக்கூடிய சூழலில் அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆளும் கட்சியான திமுக, அடுத்த முறை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
தேர்தலுக்கு ஆயத்தமாகும் திமுக:
தமிழகத்தைப் பொறுத்தவரையில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. கூட்டணிகள் ஏறக்குறைய உறுதியான சூழலில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, மக்கள் நீதி மையம், தேமுதிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் படிக்க: ரூ.1,020 கோடி ஊழல்.. “அமைச்சர் கே.என்.நேருவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்”.. விஜய் வலியுறுத்தல்
தென்மண்டல தேர்தல் முகவர்கள் மாநாடு:
இந்த நிலையில், திமுக சார்பில் தென் மண்டல தேர்தல் முகவர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறக்கூடிய சூழலில், திமுக தரப்பில் மகளிரணி மாநாடு, இளைஞரணி மாநாடு, தேர்தல் முகவர்கள் மாநாடு என பல்வேறு அமைப்புசார்ந்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தென் மண்டல திமுக தேர்தல் முகவர்கள் மாநாடு இன்று மாலை 5 மணி அளவில் மதுரை உத்தங்குடியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தென் மண்டலங்களைச் சேர்ந்த இலட்சத்திற்கும் மேற்பட்ட தேர்தல் முகவர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டில் பங்கேற்கும் நபர்களுக்காக இருக்கைகள், குடிநீர், கழிப்பறை வசதி, மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: தமிழக மக்களுக்கு நற்செய்தி… விரைவில் அறிமுகமாகிறது பாரத் டாக்ஸி சேவை!
மதுரை செல்லும் முதல்வர் ஸ்டாலின் – பயணத்திட்டம் என்ன?
இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
காலை 11.30 மணிக்கு வடபழங்கியில் உள்ள எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் துறை மேம்பாட்டு மையக் கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பின்னர் பிற்பகல் 1.00 மணி அளவில் வண்டியூர் கண்மாய் பூங்காவை திறந்து வைத்து, பல்வேறு திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து மாலை, காந்தி அருங்காட்சியகத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, இரவு 7.30 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு திரும்புகிறார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகரில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
