மக்கள் பிரதிநிதியை பிச்சைக்காரன் என இழிவுப்படுத்துவதா? ஊர்ந்து சென்று முதல்வரான இவரெல்லாம் பேசலாமா? – செல்வப்பெருந்தகை..
Selvaperunthagai: பிச்சைக்காரன் என செல்வப்பெருந்தகையை இழிவுப்படுத்திய எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், “ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ‘பிச்சைக்காரன்’ என்று இழிவுபடுத்துவது ஒரு தனிநபரை பழிப்பது மட்டுமல்ல கோடிக்கணக்கான ஏழை மக்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் செயல் ஆகும்” என தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்டம்பர் 26, 2025: “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை பிச்சைக்காரன் என்று சொல்வதா?” என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. குறிப்பாக, “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். அவரது உரைகளில் திமுக அரசையும் கூட்டணி கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
பிச்சைக்காரன் என விமர்சித்த எடப்பாடி பழனிசாமி:
அந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பொதுமக்கள் முன்பு உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, ”பிச்சைக்காரன் ஓட்டு போட்ட சட்டை போட்டிருப்பார் அல்லவா? அதுபோல் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை பல கட்சிகளில் இருந்தவர். அப்பப்போ எந்தக் கட்சியில் இருக்கிறாரோ அந்தக் கட்சிக்கு ஏற்றவாறு கொள்கையை மாற்றிக் கொள்கிறார். மற்ற தலைவர்கள் ஆட்சியின் பங்கை கேட்கிறார்கள், ஆனால் இவரும் மாற்றிப் பேசுகிறார். ராகுல் காந்தி ஆட்சியில் பங்கு கேட்கச் சொல்லவில்லை என்கிறார். இவர் உண்மையான காங்கிரஸ் தொண்டரா?” என விமர்சித்தார்.
மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தல்… தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் – யார் தெரியுமா?
பிச்சைக்காரன் என இழிவுப்படுத்துவதா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ‘பிச்சைக்காரன்’ என்று இழிவுபடுத்துவது, ஒரு தனிநபரை பழிக்கிற செயல் மட்டுமல்ல, இது கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும். இத்தகைய விஷம கருத்து, எவ்வளவு ஆழமாக அரசியலில் சமூக விரோத…
— Selvaperunthagai K (@SPK_TNCC) September 25, 2025
அதேபோல், “இவர் திமுகவிற்கே விசுவாசமாக இருக்கிறார்” எனவும் பழனிசாமி பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ‘பிச்சைக்காரன்’ என்று இழிவுபடுத்துவது ஒரு தனிநபரை பழிப்பது மட்டுமல்ல;
மேலும் படிக்க: ஜி.கே. மணியின் கட்சி பொறுப்பு பறிப்பு.. அதிர்ச்சியில் ராமதாஸ்.. பாமகவில் பரபரப்பு
கோடிக்கணக்கான ஏழை மக்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் செயல் ஆகும். இத்தகைய விஷமமான கருத்துக்கள் அரசியலில் சமூக விரோத எண்ணங்கள் எவ்வளவு ஆழமாக புதைந்துள்ளன என்பதையும், உண்மையான சிரமங்களை அறியாத செழிப்பின் அகந்தையை வெளிப்படுத்துகின்றன. மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல; அது ஜனநாயகத்தின் அடித்தளம்.
விளிம்புநிலையில் உள்ள மக்களால் அளிக்கப்படும் வாக்குகளே என் குரலாகவும், என் அரசியல் அடையாளமாகவும் இருக்கின்றன. அவர்கள் சுயமரியாதைக்கும், அன்றாட வாழ்வுப் போராட்டத்திற்கும் நான் கடமைப்பட்டவன். அந்த மரியாதையும் அந்தப் போராட்டமும், எவரின் அவமதிப்புக்கும் உரியவை அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.