புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்.. வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி..
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக புதுச்சேரியை சீரழித்து வரும் பாஜக கூட்டணியை தோற்கடித்து, சமூக நல்லிணக்கமும் வளர்ச்சியும் கொண்ட ஆட்சியை அமைக்க மதச்சார்பற்ற மனப்பான்மை கொண்ட புதுச்சேரி மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, மார்ச் 26, 2026: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அங்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் குழப்பங்கள் நீடித்து வருகின்றன. காங்கிரஸ் தரப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாத சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடும் என ஏற்கனவே தொல் திருமாவளவன் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
நெருங்கும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்:
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகக்கு ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில் இருந்து உழவர்கரை தொகுதியை திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியது என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: பாஜக வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்… அண்ணாமலை போட்டியா? நயினார் எந்த தொகுதி!
அந்த தொகுதியில், ஆர்.எஸ்.எஸ்., பாஜக சார்ந்தவராக இருந்து பாஜகவிலிருந்து விலகி, ஓரிரு வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஒருவரை தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பின்னரும் அந்த வேட்பாளரை வாபஸ் பெறச் செய்யாமல் காங்கிரஸ் தொடர்ந்து நிறுத்தி இருப்பதாகவும், புதுவை காங்கிரஸ் அதனை வாபஸ் பெற மறுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால், காங்கிரஸ் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி உண்டா இல்லையா என்பது தெளிவாகாத நிலை ஏற்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 26, பிற்பகல் 3 மணியுடன் முடிவடைகிறது.
வேட்பாளர் பட்டியல் வெளியீடு:
இந்த நிலையில், காங்கிரஸின் அணுகுமுறை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றி வாய்ப்பையும் கேள்விக்குறியாக்குகிறது. எனவே, வேறு வழியின்றி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பு மனு தாக்கல் செய்துள்ள மூன்று தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை அறிவிக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஐபிஎஸ் டூ அரசியல்.. இடையில் சிறிய அதிருப்தி.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா கே.அண்ணாமலை!
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக புதுச்சேரியை சீரழித்து வரும் பாஜக கூட்டணியை தோற்கடித்து, சமூக நல்லிணக்கமும் வளர்ச்சியும் கொண்ட ஆட்சியை அமைக்க மதச்சார்பற்ற மனப்பான்மை கொண்ட புதுச்சேரி மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதே சமயம்,
- உசுடு தொகுதியில் அரியபுத்ரி (எ) அரிமா தமிழன்
- நெட்டப்பாக்கம் தொகுதியில் அமுதவன்
- உழவர்கரை தொகுதியில் செல்வ புஷ்பலதா
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.