திமுக தூண்டுதலால் என் மீது பாலியல் புகார்… அந்த பெண் அக்கா மாதிரி…பூந்தமல்லி தவெக வேட்பாளர் பரபரப்பு பேட்டி!
Poonamalli Tvk Candidate Prakasam: தமிழக வெற்றிக் கழகத்தின் பூந்தமல்லி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரகாசம் மீது அந்தக் கட்சியின் பெண் நிர்வாகி அளித்த பாலியல் புகார் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், திமுக தூண்டுதலின் பேரால், இந்த புகார் அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

பாலியல் புகார் குறித்து தவெக வேட்பாளர் பிரகாசம் விளக்கம்
தமிழக வெற்றிக் கழகத்தின் பூந்தமல்லி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் பிரகாசம். இவர் மீது, அந்த கட்சியின் மகளிர் அணியின் பெண் நிர்வாகி ஒருவர் திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாலியல் தொந்தரவு புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக, பூந்தமல்லி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பிரகாசம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர் எஸ். பி. அலுவலகத்தில் எங்கள் கட்சியின் பெண் நிர்வாகி என் மீது புகார் அளித்திருந்தார். அந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. அந்த பெண் தவெகவில் சேர்ந்து 2 ஆண்டுகளே ஆன நிலையில், பதவி கேட்டார். ஆனால், கட்சியில் உழைத்தவர்கள் மற்றும் சீனியர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும் என்று கட்சி தலைமை தெரிவித்தது. இதனை நான் அவரிடம் எடுத்துக் கூறினேன்.
திமுக தூண்டுதலால் என் மீது பொய் பாலியல் புகார்
ஆனால், அவர் அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். திமுகவின் தூண்டுதலின் பெயரில் எனது பெயரையும், கட்சி பெயரையும் களங்கம் செய்து வருகிறார். பூந்தமல்லி தொகுதி வேட்பாளராக கட்சியின் தலைவர் விஜயும், பொதுச் செயலாளர் ஆனந்தும் என்னை அறிவித்தனர். இதனை பொறுக்க முடியாமல் அந்த பெண் உள்ளிட்டோர் என்னை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த புகாரை அளித்துள்ளனர். கடந்த ஒராண்டுக்கு முன்பு தவெகவில் உள்ள வழக்கறிஞரின் திருமண நிகழ்வில் பொதுச் செயலாளர் ஆனந்த் வருகை தந்தார்.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… எடப்பாடி கே.பழனிசாமி!
எனது வெற்றியை தடுக்கும் வகையில்…
அப்போது, மேடையில் நின்று கொண்டிருந்த அந்த பெண் உள்ளிட்டோரை வழி விடுமாறு கூறினேன். இதில், என்னை தவறாக நினைத்துக் கொண்டு என் மீது பொய்யான புகார் அளித்துள்ளார். நான் தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். அதை பார்க்காமல் எனக்கு மாவட்ட செயலாளர் பதவியும், பூந்தமல்லி வேட்பாளராகவும் விஜய் அறிவித்துள்ளார். இந்த தொகுதியில் நான் வெற்றி பெறுவேன் என்பதை தெரிந்து கொண்டு மாற்று கட்சியினரிடம் விலைபோன அந்த என் மீது பொய்யான புகார் அளித்துள்ளார். இதனை நான் சட்ட ரீதியாக சந்திக்கிறேன். என் மீதான புகாருக்கு ஆதாரம் இருந்தால் தைரியமாக காண்பிக்கலாம்.
என்னிடம் விசாரிக்காமல் வழக்குப்பதிவு
அந்தப் பெண் அளித்த புகாரில் போலீசார் என்னிடம் விசாரணை மேற்கொள்ளாமல் நேரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு எதிராக எனது தரப்பை சேர்ந்தோர் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். தமிழக வெற்றி கழகத்தின் பெயர் மற்றும் கட்சியின் தலைவர் பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: திமுக தேர்தல் அறிக்கையை பார்த்து எடப்பாடி புலம்புகிறார்… முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!