எலுமிச்சை பழம் மூலம் வேட்பாளர் தேர்வு… புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸில் விசித்திரம்!
NR Congress Party Candidate: புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் அப்பா பைத்தியம் சுவாமி அருள்வாக்கு கூறிய நபர் மற்றும் எலுமிச்சை பழம் பெறும் நபரே வேட்பாளராக தேர்வு செய்யப்படுகிறார். இந்த நிகழ்வு 2011- ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.

சுவாமி அளிக்கும் எலுமிச்சை பழம் மூலம் வேட்பாளர் தேர்வு
பொதுவாகவே தேர்தல் என்றாலே வேட்பாளர்கள் விருப்ப மனு சமர்ப்பித்தல், வேட்பாளர் நேர்காணல், வேட்பாளர் அறிவிப்பு ஆகியவை தான் நடைமுறையாகும். ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் என். ஆர். காங்கிரஸ் கட்சியில் வேறொரு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்சியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்கள் மற்றும் வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டது கிடையாது. அதற்கு மாறாக வேட்பாளர்கள் சமர்ப்பித்துள்ள வேட்பு மனுக்களை அந்த கட்சியின் தலைவர் என். ரங்கசாமி தனது வீட்டின் அருகே உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் சுவாமியின் கருவறையில் வைத்து அவரே சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்வார். இதன் பின்னர், சுவாமிக்கு படைக்கப்பட்ட நெய்வேத்தியத்தை அவரது கைகளால் சுவாமிக்கு ஊட்டி விடுவார். இதைத் தொடர்ந்து, அப்பா பைத்தியம் சுவாமிகளின் அருள் வாக்குக்காக ரங்கசாமி காத்திருப்பார்.
என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது முதல்…
பின்னர், தேர்தலில் போட்டியிடுவதற்கு அப்பா பைத்தியம் சுவாமி அருள்வாக்கு கூறிய வேட்பாளர்களுக்கு மட்டும் விபூதி மற்றும் எலுமிச்சை பழம் ஆகியவற்றை என். ரங்கசாமி கொடுப்பார். யாருக்கு எலுமிச்சை பழம் கிடைக்கிறதோ, அவரே சம்பந்தப்பட்ட தொகுதியின் என். ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஆவார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த என். ரங்கசாமி, அந்தக் கட்சியில் இருந்து விலகி கடந்த 2011- ஆம் ஆண்டு என். ஆர். காங்கிரஸ் என்ற புது கட்சியை தொடங்கியது முதல் தற்போது வரை இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் அதிருப்தி.. கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் பேச்சுவார்த்தை புறக்கணிப்பு..
அப்பா பைத்தியம் சுவாமியின் தீவிர பக்தர் ரங்கசாமி
புதுச்சேரி மாநிலமானது பல்வேறு சித்தர்கள் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த ஆன்மீக மாநிலமாகும். இதனால், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் ஜீவ சமாதி அடைந்த சித்தர்களின் ஆலயங்கள் அமைந்துள்ளன. தற்போது, புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து வரும் என். ரங்கசாமி அப்பா பைத்தியம் சுவாமியின் தீவிர பக்தர் ஆவார். அரசியல் ரீதியாகவோ அல்லது கட்சி ரீதியாகவோ எந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டாலும் முன்னதாக அப்பா பைத்தியம் சுவாமியிடம் உத்தரவு வாங்கிய பின்னரே அதற்கான நடவடிக்கையில் இறங்குவார்.
அப்பா பைத்தியம் சுவாமி உத்தரவின் பேரில்…
இதேபோல, தேர்தல் நேரம், அரசியல் மற்றும் கட்சிகளில் நெருக்கடியான நேரங்களில் முதல்வர் ரங்கசாமி சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோவிலுக்கு செல்வது வழக்கமாகும். அங்கு, அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் ஆகியவற்றில் பங்கேற்று விட்டு மீண்டும் புதுச்சேரி திரும்புவார். அங்கு, அப்பா பைத்தியம் சுவாமி அளித்த உத்தரவின் அடிப்படையில், ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பார். இது புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமியின் வழக்கமான நடைமுறை ஆகும்.
மேலும் படிக்க: “அதிமுக கூட்டணி 210 இடங்களில் நிச்சயம் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்”.. இபிஎஸ் நம்பிக்கை!!