கடையநல்லூர் தொகுதி கள நிலவரம் என்ன? மீண்டும் திமுக வெற்றியை கைப்பற்றுமா?
திமுக சார்பில் நேரடியாக இந்த தொகுதியில் நீண்ட காலமாக போட்டியிடவில்லை என்ற நிலை இந்த தேர்தலிலும் தொடர்ந்தாலும், மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தி.மு. இராஜேந்திரன், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது திமுகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதை களத்தில் காண முடிகிறது.

கோப்பு புகைப்படம்
ஏப்ரல் 21, 2026: தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் மதிமுகவைச் சேர்ந்த தி.மு. இராஜேந்திரனும், அதிமுக சார்பில் சிட்டிங் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பாவும் போட்டியிடுகின்றனர். கடையநல்லூர் தொகுதியைப் பொறுத்தவரை, ஒரே கட்சி தொடர்ந்து செல்வாக்கை நிலைநாட்டியதாக வரலாறு இல்லை. கடந்த முறை ஏணி சின்னத்தில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த அபுபக்கரை எதிர்த்து வெற்றி பெற்றவர் தான் தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குட்டியப்பா.
தொகுதி வரலாறு, இந்த முறையும் தொடர்ந்து இரண்டாவது முறை குட்டியப்பா வெல்ல முடியாமல் போய்விடுமோ என்ற நிலை இருப்பதை மறுப்பதற்கு இல்லை. அதற்கான வலுவான காரணங்களும் உள்ளன.
கடையநல்லூரில் நிலவரம் என்ன?
திமுக சார்பில் நேரடியாக இந்த தொகுதியில் நீண்ட காலமாக போட்டியிடவில்லை என்ற நிலை இந்த தேர்தலிலும் தொடர்ந்தாலும், மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தி.மு. இராஜேந்திரன், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது திமுகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதை களத்தில் காண முடிகிறது.
அது மட்டும் அல்லாமல், மதிமுக வேட்பாளர் தி.மு. இராஜேந்திரன் கடையநல்லூர் தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமானவர். அனைவரிடமும் எளிதாக பழகக்கூடியவர். திமுகவில் மாணவர் அணியில் அரசியலைத் தொடங்கி, வைகோ மதிமுக ஆரம்பித்த பின் மாணவரணி செயலாளர், மாவட்ட செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் என 30 ஆண்டுகளாக நீண்ட அரசியல் அனுபவம் உடையவர்.
திமுக வெற்றியை கைப்பற்றுமா?
கேரள மருத்துவ கழிவுகள் தமிழக எல்லைப் பகுதியில் அத்துமீறி கொட்டப்பட்ட விவகாரம் உள்ளிட்ட விவசாயிகளுக்கான பல்வேறு பிரச்சினைகளில் களத்தில் நின்றவர். மாவட்ட ஆட்சியர் தொடங்கி அமைச்சர் பெருமக்களை சந்தித்து தீர்வுகளை ஏற்படுத்தி கொடுத்தது அவருக்கு ஒரு பலமாக உள்ளது.
தேர்தல் பரப்புரையிலும் வேகம் காட்டுகிறார். முதலமைச்சர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்களின் தேர்தல் பரப்புரை, வேட்பாளரின் எளிய நடைமுறை, தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மீதான அதிருப்தி ஆகியவை எல்லாம் காரணமாக, கடையநல்லூரில் உதயசூரியன் உதிக்கும் என்பதே கள நிலவரமாக இருக்கிறது.