சூடுபிடிக்கும் அரசியல் களம்.. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 234 தொகுதிகளிலும் திமுக பரப்புரை..
DMK Campaign: திமுக கூட்டணியில், தொகுதி பங்கீடு மட்டுமே எஞ்சியுள்ளது. அதாவது, யாருக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்பது மட்டும் தீர்மானிக்கப்பட வேண்டிய நிலையில், வரக்கூடிய பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பரப்புரை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர பேச்சாளர்களும் அடங்குவார்கள்.
சென்னை, ஜனவரி 27, 2026: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் அதற்கான பணிகளை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், வரக்கூடிய பிப்ரவரி 1, 2026 முதல் பரப்புரை மேற்கொள்ளப்படும் என திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் தற்போது வரை எந்தவித மாற்றமும் இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அப்படியே தொடர்கிறது.
இந்த நிலையில், தொகுதி பங்கீடு மட்டுமே எஞ்சியுள்ளது. அதாவது, யாருக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்பது மட்டும் தீர்மானிக்கப்பட வேண்டிய நிலையில், வரக்கூடிய பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பரப்புரை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திமுக பரப்புரை:
“தமிழ்நாடு தலைகுனியாது” 234 சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை
– தலைமைக்கழக அறிவிப்பு
மாண்புமிகு கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் 20.01.2026 நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பரப்புரை… pic.twitter.com/JNyi5CGbw4
— DMK (@arivalayam) January 27, 2026
இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், “மாண்புமிகு கழகத் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 20.01.2026 அன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் பெண்கள் சுதந்திரத்துக்கு உரிய கட்டமைப்பு வழங்கப்படும்…முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
இந்த பரப்புரையின் கீழ், கழகத் தலைவர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை பயணத்தை மேற்கொள்ள உள்ளனர்.
பரப்புரை எப்படி இருக்க வேண்டும்?
இந்த பரப்புரையின் போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு பொதுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் / மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பரப்புரையாளர்கள், அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும், கலந்துகொள்வோரின் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: அமமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ஆதரவாளர் அய்யப்பன்?டிடிவி தினகரனுடன் திடீர் சந்திப்பு…பின்னணி என்ன!
‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையை வெற்றியடையச் செய்திடும் வகையில், பரப்புரை தொடர்பான தக்க விளம்பரங்களை மேற்கொள்ளவும், தொகுதிகளில் தேவையான ஏற்பாடுகளை செய்யவும், மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.