சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. பாதுகாப்பு படையின் 50 கம்பெனிகள் மார்ச் 10 ஆம் தேதி தமிழகம் வருகை..
2026 Assembly Election: தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் கட்சிச் சின்னங்களுடன் கூடிய பேலட் சீட்டுகள் பொருத்தப்படும். இதுவரை கருப்பு-வெள்ளை நிற பேலட் சீட்டுகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இம்முறை முதன்முறையாக வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்களும் இடம்பெற உள்ளன.

கோப்பு புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 24, 2026: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரவிருக்கும் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை விமர்சையாக மேற்கொண்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பிலும் தீவிர பணிகள் நடைபெற்று வருகின்றன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள்:
அதன் ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 2025ஆம் ஆண்டு தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 23, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழகத்திற்கு வருகை தரும் தலைமை தேர்தல் அதிகாரி:
இதற்கிடையில், பிப்ரவரி 26 மற்றும் 27ஆம் தேதிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தமிழகத்திற்கு வருகை தருகிறார். அவரது வருகையின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பிற அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் கட்சிச் சின்னங்களுடன் கூடிய பேலட் சீட்டுகள் பொருத்தப்படும். இதுவரை கருப்பு-வெள்ளை நிற பேலட் சீட்டுகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இம்முறை முதன்முறையாக வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்களும் இடம்பெற உள்ளன.
மேலும் படிக்க: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்.. மீண்டும் விண்ணப்பிப்பது எப்படி?
தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி:
மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுப்பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய கள ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
50 கம்பெனிகள் மார்ச் 10 ஆம் தேதி தமிழகம் வருகை:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மத்திய பாதுகாப்புப் படையின் முதல் கட்டமாக 50 கம்பெனிகள் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவை மார்ச் 10ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு மார்ச் மாத இரண்டாவது வாரத்தில் வெளியாகக்கூடும் என கூறப்பட்டுள்ளது.