Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகை பெற இவர்களுக்கு தகுதி இல்லை.. யாருக்கெல்லாம்?
Kalaignar Magalir Urimai Thogai Scheme | தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஏற்கனவே 1 கோடியே 14 லட்சம் மகளிர் பயன்பெற்று வரும் நிலையில், மீதமுள்ள மகளிருக்கு பயனளிக்கும் வகையில், புதிய பயனர்களை இணைக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இதற்கான முகாம்கள் மே 29, 2025 முதல் நடைபெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக (DMK – Dravida Munnetra Kazhagam) அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (Kalaignar Magalir Urimai Thogai Scheme) செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே கோடிக்கணக்கான பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், புதிய பயனர்களை இணைக்கும் முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பெண்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற யாருக்கெல்லாம் தகுதி இல்லை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் 1 கோடி மகளிர் பயன்பெறும் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில், தமிழகத்தில் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதாவது 2023 ஆம் ஆண்டு, செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாள் அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தற்போது வரை ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் மாத உரிமை தொகை பெற்று வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் மொத்தம் இரண்டு கோடியே 16 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் மீதமுள்ள மகளிருக்கு மாத உரிமைத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி, மே 29, 2025 முதல் மகளிர் உரிமைத்தொகைக்கான முகாமல் தொடங்கப்பட்டு அதன் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவர்கள் யார் யார்?
- ரூ. 2.50 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமான ஈட்டும் குடும்பங்களை சேர்ந்த மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது.
- ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்திற்கு மேல் வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது.
- ரூ. 2 லட்சத்திற்கு மேல் தொழில் வரி செலுத்தும் நபர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது.
- மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், வாரிய உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள், கூட்டுறவு அமைப்பின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் மகளிருக்கு உரிமைத் தொகை கிடைக்காது.
- வார்டு உறுப்பினர்களை தவிர சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டோருக்கு உரிமைத் தொகை வழங்கப்படாது.
- மேலும் கார், ஜீப், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை வைத்திருக்கும் நபர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படாது.
மேற்குறிப்பிட்ட இந்த தகுதிகளில் உடையவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.