Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற மே 29 முதல் விண்ணப்பிக்கலாம்!

Kalaignar Magalir Urimai Thogai Camp | தமிழகத்தில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற மே 29 முதல் விண்ணப்பிக்கலாம்!

மாதிரி புகைப்படம்

Published: 

22 May 2025 15:53 PM

தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகள் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் மற்றும் புதிய பயனர்களை இணைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான முகாம்கள் மே 29, 2025 முதல் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து வெளியான தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

திமுக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டம்

2021 சட்டமன்ற தேர்தலில் வாக்கு சேகரிப்பின் போது திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது. அதன்படி ஆட்சிக்கு வந்த திமுக அரசு செப்டம்பர் 15, 2023 அன்று அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தது. இந்த திட்டத்திற்கு 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தகுதியான 1 கோடியே 6 லட்சம் பேருக்கு முதற்கட்டமாக மகளிர் உரிமைத் தொகையை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதுக்கு பின்னர், விடுபட்ட 7 லட்சத்து 15 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டன. அப்போது 11 லட்சத்து 86 ஆயிரம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தனர். அதில், 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டனர். அதன்படி தற்போதைய நிலவரத்தின் படி, 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயணர்களை இணைப்பது எப்போது?

ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற்று வரும் நிலையில், விடுபட்ட மற்றும் புதிய பயனர்களை இணைப்பது எப்போது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் தான் ஜூன் 2025 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்பை பெற்ற நிலையில், மே 29, 2025 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் முகாம்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.