AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

என் அப்பாவின் படுகொலைக்கு நாங்கள் நிச்சயம் பழிவாங்குவோம் – ஈரானின் உயரிய தலைவர் உறுதி

ஈரானின் தற்போதைய உயரிய தலைவரான மொஜ்தபா கமேனி, தனது தந்தையின் படுகொலைக்குக் காரணமானவர்கள் எக்காரணம் கொண்டும் தப்பவிடப்பட மாட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தான் உயிருடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தனது தந்தையான அலி கமேனியின் கொலைக்குப் பின்னணியில் இருந்தவர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை உறுதி என்று அவர் உறுதியளித்தார்.

என் அப்பாவின் படுகொலைக்கு நாங்கள் நிச்சயம் பழிவாங்குவோம் – ஈரானின் உயரிய தலைவர் உறுதி
அயதுல்லா அலி கமேனி
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Jul 2026 22:03 PM IST

ஈரானின் தற்போதைய உயரிய தலைவரான மொஜ்தபா கமேனி, தனது தந்தையின் படுகொலைக்குக் காரணமானவர்கள் எக்காரணம் கொண்டும் தப்பவிடப்பட மாட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தான் உயிருடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தனது தந்தையான அலி கமேனியின் கொலைக்குப் பின்னணியில் இருந்தவர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை உறுதி என்று அவர் உறுதியளித்தார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அலி கமேனியின் இறுதிச் சடங்கின்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஒட்டுமொத்த ஈரானிய மக்களும் இதே முடிவையே விரும்புவதாக மொஜ்தபா கமேனி வலியுறுத்தினார். இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை தனது அல்லது பிற அதிகாரிகளின் தனிப்பட்ட இருப்பைச் சார்ந்ததல்ல என்றும், தாங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதிரிகள் நிச்சயம் தண்டனையை எதிர்கொள்வார்கள் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும், இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஈரான் மற்றும் ஈராக் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கும் – குறிப்பாக தெஹ்ரான், கோம், நஜாஃப், கர்பலா மற்றும் மஷாத் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கும் – அவர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டதுடன், எதிரிகளுக்குக் கடுமையான எச்சரிக்கையையும் விடுத்தார்.

தெஹ்ரானில் உள்ள அவரது அலுவலகத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் பிப்ரவரி 28 அன்று அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது மறைவுக்குப் பல மாதங்களுக்குப் பிறகு, மஷாத் நகரில் உள்ள இமாம் ரெசா புனிதத் தலத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் வியாழக்கிழமை நள்ளிரவில் அவரது இறுதிச் சடங்குகள் நிறைவடைந்தன. இத்தகைய சூழலில்தான் மொஜ்தபா கமேனியிடமிருந்து இந்தத் தீவிர எச்சரிக்கைகள் வெளிவந்துள்ளன.

இருப்பினும், மொஜ்தபாவின் இந்த அறிவிப்புக்கு ஒரு நாள் முன்னதாகவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இவ்விவகாரம் குறித்துக் காட்டமாகப் பதிலளித்திருந்தார். தன்னை படுகொலை செய்ய ஈரான் நீண்ட காலமாகத் திட்டமிட்டு வருவதாக அவர் கூறினார். ‘நியூயார்க் போஸ்ட்’ இதழுக்கு அளித்த பேட்டியில், ஈரானின் “தாக்குதல் பட்டியலில்” (hit list) தான் நீண்ட காலமாகவே முதலிடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட டிரம்ப், தனக்கு ஏதேனும் நேர்ந்தால் ஈரானின் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிலான குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்துமாறு அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Follow Us