பிப்ரவரி 14, 2026: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “மோடியின் அரசியல் வாழ்க்கையை நான் அழிக்க விரும்பவில்லை” என்று கூறியதாக வெளியான ஒரு வீடியோ குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதிலளித்தார். பிப்.12 நடைபெற்ற தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில், குறித்த வீடியோவை தாம் பார்க்கவில்லை என்று ஜெய்ஸ்வால் தெளிவுபடுத்தினார்.
தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் – இந்திய வெளியுறவுத்துறை:
டிரம்பின் கருத்துகள் குறித்து கேட்கப்பட்டபோது, “அந்த வீடியோவை நான் பார்க்கவில்லை. ஆனால் அத்தகைய வீடியோ இருந்தால், அது உண்மையா அல்லது தவறானதா என்பது பொருட்படுத்தாமல், அதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போம்” என அவர் கூறினார்.
அதிபர் டிரம்ப் சொன்னது என்ன?
இந்தக் கருத்து, எஃப்பிஐ இயக்குநருடன் டிரம்ப் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இருந்து மீண்டும் பரவிய ஒரு காணொளி வெளியானதையடுத்து வெளியிடப்பட்டது. அந்த காணொளியில் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டிய டிரம்ப், “மோடி ஒரு சிறந்த மனிதர்; அவர் டிரம்பை நேசிக்கிறார்” என்று கூறியதாகத் தெரிகிறது. மேலும், “love” என்ற சொல்லை வேறு விதமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: வங்கதேச தேசியவாத கட்சி அபார வெற்றி.. தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
“அவர் ஒரு சிறந்த மனிதர். மோடி ஒரு சிறந்த மனிதர்; அவர் டிரம்பை நேசிக்கிறார். அவருடைய அரசியல் வாழ்க்கையை நான் அழிக்க விரும்பவில்லை. ஆனால், நான் இந்தியாவை பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். என் நண்பர் அங்கே நீண்ட காலமாக உள்ளார்,” என்று டிரம்ப் அந்த வீடியோவில் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ரஷ்யா வர்த்தகம்:
ரஷ்யாவுடன் இந்தியாவின் வர்த்தக மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து கேட்கப்பட்டபோது, ஜெய்ஸ்வால், “ரஷ்யா-இந்தியா இடையே வர்த்தகம் முதல் மக்கள்-மக்கள் கலாசார தொடர்புகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து ஈடுபாடும் ஒத்துழைப்பும் உள்ளது. எங்கள் இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களும் தொடர்ந்து வளர்ச்சியடையும்,” என்று கூறினார்.
அதேவேளை, இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பு தொடர்பான அமெரிக்க தகவல் தாளில் செய்யப்பட்ட சமீபத்திய திருத்தங்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான “பகிரப்பட்ட புரிதல்களை” பிரதிபலிப்பதாக அவர் விளக்கினார்.
இந்தியா அமெரிக்கா வர்த்தகம்:
ஒப்பந்தம் தொடர்பாக வெள்ளை இல்ல தகவல் தாளில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து கேட்கப்பட்டபோது, 2026 பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பு குறித்த கூட்டு அறிக்கையே இரு தரப்புகளின் பரஸ்பர புரிதலுக்கான அடிப்படையாக உள்ளது என்று ஜெய்ஸ்வால் கூறினார்.
“பரஸ்பர மற்றும் இருதரப்புக்கும் பயனளிக்கும் வர்த்தகத்துக்கான இடைக்கால ஒப்பந்த கட்டமைப்பு குறித்த இந்தியா-அமெரிக்க கூட்டு அறிக்கை 2026 பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த கூட்டு அறிக்கையே இந்த விவகாரத்தில் எங்கள் பரஸ்பர புரிதலுக்கான அடிப்படையாக உள்ளது. இரு தரப்பும் இப்போது இந்த கட்டமைப்பை செயல்படுத்தி, இடைக்கால ஒப்பந்தத்தை இறுதிப்படுத்துவதற்காக பணியாற்றும்,” என்று அவர் தெரிவித்தார்.
“அமெரிக்க தகவல் தாளில் செய்யப்பட்ட திருத்தங்கள், கூட்டு அறிக்கையில் உள்ள பகிரப்பட்ட புரிதல்களை பிரதிபலிக்கின்றன,” என்றும் அவர் சேர்த்தார்.
இந்த விளக்கம், இந்திய தரப்பு வெளியிட்ட அறிக்கையுடன் முரண்பட்டதாக முன்பு கருதப்பட்ட அமெரிக்க ஆவணத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்து வெளியான செய்திகளின் பின்னணியில் வெளியாகியுள்ளது.
