Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியா–அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்.. பிரதமர் மோடியை பாராட்டிய அதிபர் டிரம்ப்..

PM Modi - President Trump: இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “உங்கள் பிரதமரிடம் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் ஒரு அருமையான மனிதர், என் நண்பர். நாங்கள் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போகிறோம்” என டிரம்ப் தெரிவித்தார்.

இந்தியா–அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்.. பிரதமர் மோடியை பாராட்டிய அதிபர் டிரம்ப்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Jan 2026 07:50 AM IST

ஜனவரி 22, 2026: இந்தியா–அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) தொடர்பாக முழு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளும் “ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போகின்றன” என்றும் அவர் கூறினார். அதேபோல், பிரதமர் நரேந்திர மோடியை தனது நெருங்கிய நண்பரும் சிறந்த தலைவருமாக டிரம்ப் பாராட்டினார். 56வது உலக பொருளாதார மாநாட்டு (World Economic Forum) உச்சி மாநாட்டில் உரையாற்றிய பின்னர் Moneycontrol ஊடகத்திடம் பேசியபோது டிரம்ப் இந்த கருத்துகளை தெரிவித்தார்.

பிரதமர் மோடி குறித்து பேசிய அதிபர் டிரம்ப்:

இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “உங்கள் பிரதமரிடம் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் ஒரு அருமையான மனிதர், என் நண்பர். நாங்கள் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போகிறோம்” என டிரம்ப் தெரிவித்தார்.

இதற்கு முன், இந்தியாவின் வர்த்தகச் செயலர் ராஜேஷ் அகர்வால், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியா–அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் (first tranche) இறுதிப்படுத்தப்படும் நிலைக்கு அருகில் உள்ளதாக தெரிவித்தார். ஆனால் அதற்கான காலக்கெடுவை அவர் குறிப்பிடவில்லை.

இரு நாடுகளின் தலைவர்களின் வழிகாட்டுதலின் பேரில், 2025 பிப்ரவரி மாதத்தில் அதிகாரப்பூர்வமாக முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தம், தற்போதைய 191 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ள இருதரப்பு வர்த்தகத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 500 பில்லியன் டாலராக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள், 2025 பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டன் சென்றபோது முதன்முறையாக அறிவிக்கப்பட்டன.

இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம்:

இந்தியாவின் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்த சுங்கவரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டு தற்போது கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கடந்துள்ளன. அந்த உயர்வில் பாதியை, இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்கான “தண்டனை” என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில், வர்த்தக ஒப்பந்தம் எப்போது அல்லது உண்மையில் ஏற்படுமா என்ற சந்தேகம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த அச்சத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், டிரம்பின் முக்கிய உதவியாளரான அமெரிக்க வர்த்தகச் செயலர் ஹாவர்ட் லட்னிக், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபருக்கு தொலைபேசி அழைப்பு விடுக்காததால், சாத்தியமான இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக கூறினார். மேலும், டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 500 சதவீதம் வரை சுங்கவரி விதிக்கக் கூடிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மற்றொரு உதவியாளர் சமீபத்தில் தெரிவித்தார். பிரதமர் மோடியுடன் நட்பு இருப்பதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையிலும், இத்தகைய கருத்துகள் இருதரப்பு உறவுகளின் எதிர்காலம் குறித்து கவலைக்குரியதாகப் பார்க்கப்பட்டன.

லட்னிக்கின் கருத்துகளை இந்தியா உடனடியாக மறுத்தது. இருப்பினும், இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், இந்தியாவை அமெரிக்கா ஒரு முக்கிய கூட்டாளியாகக் கருதுகிறது என்றும், வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் கூறியதையடுத்து, மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டது.

மேலும் படிக்க: க்ரீன்லாந்து ஏன் அமெரிக்காவிற்கு முக்கியம்? அதிபர் டிரம்ப் பகிர்ந்த புகைப்படங்கள்..

ஜனவரி 9ஆம் தேதி, வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா மற்றும் அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை மூலம் முடிக்க உறுதிபூண்டுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதியிலிருந்தே இரு தரப்புகளும் சமநிலையுடனும் பரஸ்பர நன்மை பயக்கும் வகையிலும் ஒப்பந்தத்தை உருவாக்க பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன” என தெரிவித்தது.

“பல சந்தர்ப்பங்களில் நாங்கள் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிகவும் அருகில் வந்துள்ளோம்” என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.