கொரோனாவை விட மோசமான தொற்றுநோய் வரலாம் – அமெரிக்க விஞ்ஞானி எச்சரிக்கை

Deadly Fungus Alert : கொரோனாவை விட மோசமான பாதிப்பு ஏற்படக் கூடும் என அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்திருக்கிறார். புதிதாக ஏற்படும் பூஞ்சை பாதிப்பு மனிதர்களை மட்டுமல்லாமல் பயிர்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அமெரிக்க விஞ்ஞானி கார்டன் சி. சாங் என்பவர் தெரிவித்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனாவை விட மோசமான தொற்றுநோய் வரலாம் - அமெரிக்க விஞ்ஞானி எச்சரிக்கை

மாதிரி புகைப்படம்

Updated On: 

08 Jun 2025 16:24 PM

கொரோனா வைரஸ் (Corona Virus) உலகத்தையே புரட்டி போட்டதை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பொருளாதாரத்தில் ஏற்பட்ட கடும் பாதிப்புகள், மக்கள் வாழ்க்கை மாறிய விதம் என  பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இன்னும் மக்கள் அதில் இருந்து  மனதளவில் முழுமையாக வெளியே வரவில்லை. இந்நிலையில், சமீபத்தில், சீனாவைச் (China) சேர்ந்த யூன்சிங் ஜியான் (33) மற்றும் அவரது காதலர் சுன்யொங் லியூ (34) ஆகியோர், Fusarium graminearum எனப்படும் ஒரு அபாயகர பூஞ்சையை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ நிபுணரான கார்டன் சி. சாங், ஃபாக்ஸ் நியூஸ்க்கு அளித்த பேட்டியில், “நாம் எச்சரிக்கையுடன் இருக்கவில்லை என்றால், கொரோனாவை விட மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விஷயம் ஒன்றால் அமெரிக்கா பாதிக்கப்படும்,” என அவர் எச்சரித்துள்ளார்.

பூஞ்சையின் பின்னணி

இதுகுறித்து மேலும் கார்டன் சி. சாங் தெரிவித்ததாவது, “இந்த பூஞ்சை வகை, சாதாரணமாக தோன்றலாம். ஆனால், இது அரிசி, கோதுமை, மக்காச்சோளம், பார்லி போன்ற பயிர்களுக்கு ஹெட் பிளைட் எனப்படும் தீவிர நோயை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல, மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் கல்லீரல் பாதிப்பு, இனப்பெருக்க கோளாறு போன்ற உடல்நல பாதிப்புகளையும் இவை ஏற்படுத்தும். இது அமெரிக்கா மீது நடத்தப்படும் யுத்தம் போன்றது. இது திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கிறது என நம்புகிறேன். நம் நாட்டின் பாதுகாப்பை நாம் நாம் இலகுவாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் சீனா அதன் மக்களை போருக்கு தயார்படுத்திக்கொண்டிருக்கிறது என்றார்.

பூஞ்சையை கடத்தியதாக பெண் கைது

 

“நாம் சீனாவுடன் தொடர்புகளை முற்றிலுமாக துண்டிக்க வேண்டும். இது கடுமையான முடிவு என்று சிலர் நினைக்கலாம். ஆனால் சீனா நம்மை பல தடவைகள் தாக்கிய பிறகும் நாம் அமைதியாக இருக்க முடியாது. சீனாவை தொடர அனுமதித்தால் கொரோனா, பென்டனில், இவற்றைவிட அதிக தீமையை சந்திக்க நேரிடும்,” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யார் இந்த கார்டன் சாங்?

கார்டன் சி. சாங், ‘China Is Going to War’ உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளவர். சீனா மற்றும் ஹாங்காங்கில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வாழ்ந்த அனுபவமுள்ள இவர், அமெரிக்க சட்ட நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். சீன அரசியல், பாதுகாப்பு துறைகளில் வல்லுநரான அவருக்கு உலக அளவில் மிகப்பெரிய அனுபவம் இருக்கிறது.

கார்டன் சி.சாங்கின் கருத்து உலக அளவில் மக்களை மிகப்பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மெல்ல மீண்டு வருகிறார்கள். உலக அளவில் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் புதிதாக பூஞ்சை பாதிப்பு குறித்து கார்டன் சி.சாங்கின் எச்சரிக்கை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.