America : சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு கொடிய பூஞ்சையை கடத்திய பெண் கைது.. அதிர்ச்சி சம்பவம்!
FBI Arrests Chinese Researcher | மிகவும் கொடிய பூஞ்சையை சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தியதாக சீன ஆய்வாளரை அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான FBI கைது செய்துள்ளது. இந்த விவகரம் தொடர்பாக அந்த பெண் மற்றும் அவரது காதலன் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமெரிக்கா, ஜூன் 04 : அமெரிக்காவில் (America) மிகவும் ஆபத்தான உயிரியல் நோய் கிருமியை (Deadly Fungus) கடத்தியதாக சீனாவை சேர்ந்த ஆய்வாளரை கைது செய்துள்ளதாக எஃபிஐ (FBI – Federal Bureau of Investigation) தலைவர் காஷ் படேல் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சீன ஆய்வாளர் கடத்தியதாக கூறப்படும் அந்த பூஞ்சையால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன என்ன, அந்த ஆய்வாளர் அமெரிக்காவுக்கு இந்த பூஞ்சையை கடத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவுக்கு ஆபத்தான உயிரியல் நோய் கிருமியை கடத்திய ஆய்வாளர்
யுன்கிங் ஜியான் என்ற சீனாவை சேர்ந்த அந்த பெண், ஃபுசாரியம் கிராமினேரம் என்ற மிகவும் ஆபத்தான பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்தியதாக கூறப்படுகிறது. இந்த பூஞ்சை வேளாண் பயங்கரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய காரணியாக கருதப்படுகிறது. அந்த பெண் தான் பணிபுரியும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்த பூஞ்சையை கடத்தியதாகவும் கூறப்படுகிறது.
எஃபிஐ தலைவர் காஷ் படேல் எக்ஸ் பதிவு
New… I can confirm that the FBI arrested a Chinese national within the United States who allegedly smuggled a dangerous biological pathogen into the country.
The individual, Yunqing Jian, is alleged to have smuggled a dangerous fungus called “Fusarium graminearum,” which is an…
— FBI Director Kash Patel (@FBIDirectorKash) June 3, 2025
இது குறித்து கூறியுள்ள காஷ் படேல், இந்த பூஞ்சை ஹெட் பிளைட் (Head Blight) என்ற கொடிய நோயை ஏற்படுத்தக்கூடும். இது அரிசி, கோதுமை, பார்லி, சோளம் உள்ளிட்டவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் வாழ்வாதாரத்தில் சுகாதார சிக்கல்களை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இந்த பூஞ்சை ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான டாலர்கள் பொருளாதார இழப்புகளுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சீன ஆய்வாளரான அந்த பெண் தனது காதலனுடன் இணைந்து இந்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதும், அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.