16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை?.. ஆஸ்திரேலியா மாடலை அறிமுகம் செய்யும் இந்திய அரசு?
Indian Government Planning To Implement Australia Model | ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி புகைப்படம்
புதுடெல்லி, பிப்ரவரி 18 : பிரான்ஸ் (France) உள்ளிட்ட சில உலக நாடுகள் மேற்கொண்டுள்ளதை போலவே இந்தியாவிலும் (India) 16 வயதுக்கு குறைவாக உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களை (Social Media Platforms) பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப துறையின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் இந்த தகவலை கூறியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிறுவர்கள் மத்தியில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள்
தற்போதைய சூழலில் சிறுவர்களும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். கல்வி தொடர்பான தேடல்கள், வாட்ஸ்அப் குழுக்கள் என அவர்களுக்கு சில தேவைகள் உள்ள நிலையில், பெற்றோரும் அவர்களுக்கென தனி ஸ்மார்ட்போனை வாங்கி கொடுக்கின்றனர். ஆனால், சிறுவர்கள் பலர் சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்கி அதனை பயன்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க : ஸ்மார்ட்போனில் தேங்கி கிடக்கும் ஜங்க் டேட்டா.. கிளியர் செய்வது எப்படி?
இவ்வாறு சமூக ஊடகங்களை பயன்படுத்தும் சிறுவர்கள் பாலியல் தொல்லை, ஆன்லைன் கேம், மோசடி ஆகியவற்றுக்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக தவறான முடிவுகளையும் அவர்கள் எடுக்கின்றனர். எனவே சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போல இந்தியாவிலும் தடை விதிக்க திட்டம்?
சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது தொடர்பான சிக்கல்கள் இந்தியாவில் மட்டுமன்றி பல்வேறு உலக நாடுகளிலும் உள்ளது. இதன் காரணமாக தான் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளன. இந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஏஐ சாட்பாட்களை டின்னர் டேட்டுக்கு அழைத்து வாருங்கள்.. நியூயார்க் உணவகம் அறிவிப்பு!
முன்னதாக, வயது கட்டுப்பாடுகள் தொடர்பாக சமூக ஊடகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று பிப்ரவரி 17, 2026 அன்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அதனை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.