வீடு புகுந்து கல்லூரி மாணவி குத்திக் கொலை.. இளைஞர் செய்த கொடூரம்… அதிர்ந்த பொள்ளாச்சி!
Pollachi College Student Murder : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலை ஏற்க மறுத்ததால், ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை, இளைஞர் வீடு புகுந்து கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை, ஜூன் 03 : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வீடு புகுந்து கல்லூரி மாணவி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி – உடுமலைப்பேட்டை ரோட்டை சேர்ந்தவர் பிரவீன்குமார் (23). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான அஷ்விகா. இவர் மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் பெற்றோருடன் உடுமலைப்பேட்டையில் வசித்து வந்தார். இதற்கிடையில், சம்பவத்தன்று வீட்டில் கல்லூரி மாணவி அஷ்விகா தனியார் இருந்துள்ளார். அவரது பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
வீடு புகுந்து கல்லூரி மாணவி குத்திக் கொலை
சம்பவத்தன்று மதியம் 12.30 மணியளவில் இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக வீட்டிற்கு மாணவியின் தந்தை வந்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே பொள்ளாச்சி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்தவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த மாணவியின் தந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.




மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தினர். அப்போது, சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதற்கட்ட விசாரணையில், இளைஞர் பிரவீன், கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். தனது காதல் குறித்து கல்லூரி மாணவியிடமும் அவர் பலமுறை கூறியிருக்கிறார்.
ஆனால், அந்த மாணவி தனக்கு விருப்பம் இல்லை என தொடர்ந்து கூறி வந்துள்ளார். இருப்பினும், அந்த மாணவியை பின்தொடர்ந்து, தனது காதல் குறித்து தொடர்ந்து கூறி வந்திருக்கிறார். இதற்கிடையில், அந்த மாணவி, தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
பகீர் காரணம்
இதனை பார்த்து பிரவீன் கோபமாக இருந்துள்ளார். இதனை அடுத்து, 2025 ஜூன் 2ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மாணவியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது, தன்னை காதலிக்க வேண்டும் என அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
அந்த மாணவி காதலுக்கு சம்மதிக்காததால், கையில் வைத்திருந்த கத்தியால் அவரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். மேலும், மார்பு மற்றும முதுகிலும் கொடூரமாக குத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியை கொலை செய்துவிட்டு, இளைஞர் பிரவீன் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.