தவெக தலைவர் விஜய்யின் வேளாங்கண்ணி பயணம் ரத்து? எமாற்றத்தில் மக்கள்..
தமிழக அரசியல் களத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய நான்கு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில், விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். மேலும், 233 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர்.

கோப்பு புகைப்படம்
மே 2, 2026: தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்ய்யின் வேளாங்கண்ணி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தனது முதல் தேர்தலை சந்திக்கும் தமிழக வெற்றி கழகத்தின் வாக்கு சதவீதம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்:
தமிழக அரசியல் களத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய நான்கு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில், விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். மேலும், 233 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர்.
ஏப்ரல் 29ஆம் தேதி வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில், பெரும்பாலான நிறுவனங்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு 15 முதல் 30 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், 10 முதல் 30 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் தெரிவித்திருந்தன. சில நிறுவனங்கள் மட்டும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் உள்ளதாக கணித்திருந்தன.
விஜய்யின் ஆன்மீக சுற்றுப்பயணம்:
இதற்கிடையில், தேர்தல் முடிவடைந்த பின் விஜய் ஆன்மீகப் பயணங்களில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று வழிபட்டார். அதனைத் தொடர்ந்து சீரடி சாய்பாபா கோவில் சென்று தரிசனம் செய்தார்.
மேலும் படிக்க: தமிழக அரசியலின் மையப் புள்ளியாக மாறத் துடிக்கும் விஜய்.. புதிய வியூகம் வகுத்த தவெக..
மேலும், மே 2ஆம் தேதி வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூர் தர்கா செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. விஜய் வருகையை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் பகுதியில் அதிகாலை முதலே பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர். ஏராளமான ரசிகர்களும் அங்கு காத்திருந்தனர்.
விஜய்யின் வேளாங்கண்ணி பயணம் ரத்து:
ஆனால், விஜய் வருகை தராததால் அங்கு திரண்டிருந்தோர் ஏமாற்றமடைந்தனர். சிலர் “TVK” என கோஷமிட்டதாகவும், இந்த சூழலில் திருப்பலி சுமார் 30 நிமிடங்கள் தாமதமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, விஜய் சென்னை நகரில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக வேளாங்கண்ணி மற்றும் நாகூர் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் வருகை தராத நிலையில், இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், அங்கு காத்திருந்த ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஏற்பாடுகள் குறித்து கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.