கரூரில் பெருந்துயரம்.. ரத்து செய்யப்படுகிறதா விஜயின் பரப்புரை? அடுத்த பிளான் என்ன?
TVK Karur Stampede: கரூரில் செப்டம்பர் 27, 2025 தேதியான நேற்று நடைபெற்ற தவெக மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக சுமார் 39 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து வரக்கூடிய சனிக்கிழமை தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வாரா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, செப்டம்பர் 28, 2025: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரவிருக்கும் சனிக்கிழமை, அதாவது அக்டோபர் 4, 2025 அன்று வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த பரப்புரை நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து தலைவர் விஜய் ஆலோசித்து முடிவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற வெற்றிக்கழக தலைவர் விஜயின் பிரச்சாரத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சுமார் 39 பேர் உயிரிழந்த துயரச்சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் – தமிழக அரசின் நடவடிக்கை:
இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை… #KarurTragedy pic.twitter.com/Z9K2TZs7NW
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 28, 2025
அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த துயரச்சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு திமுக அமைச்சர் அன்பில் மகேஷ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் படிக்க: கரூர் துயரம்.. த.வெ.க மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரவோடு இரவாக கரூர் சென்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருப்பவர்களையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
வெற்றிக்கழக வழக்கறிஞர் அறிவழகன் விளக்கம்:
இந்த சூழ்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் வழக்கறிஞர் அறிவழகன் கூறியதாவது செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசியுள்ளார். அதில், “இந்த துயரச்சம்பவத்திற்கு பின் தலைவர் விஜய் மிகுந்த மனவேதனையில் உள்ளார். தமிழக வெற்றிக்கழகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் துணைநிற்கும். மக்கள் மீது அன்பு கொண்ட தலைவர் விஜயின் மனதையும் இந்த சம்பவம் மிகவும் பாதித்துள்ளது. அடுத்தடுத்து எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து தலைவருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: விஜய் கைது செய்யப்படுவாரா? முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்!
ரத்து செய்யப்படுகிறதா விஜயின் பரப்புரை?
மேலும், “இந்த கோரச் சம்பவத்துக்குப் பிறகு விஜய் உடனடியாக வருத்தம் தெரிவித்துள்ளார். உயிரிழந்த குடும்பங்களுடன் நிச்சயமாக உறுதுணையாக நிற்போம். அடுத்த வாரம் நடைபெறவுள்ள பரப்புரை குறித்து பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்டோருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இதுவரை நடைபெற்ற அனைத்து கூட்டங்களிலும் காவல்துறை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளன.” என தெரிவித்துள்ளார்.