பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கிய திருப்பூர் பெண்.. பறிபோன உயிர்.. நடந்தது என்ன?
Bengaluru Stampede : பெங்களூருவில் நடந்த ஆர்சிபி வெற்றிப் பேரணியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் காமாட்சி தேவி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது உடல் 2025 ஜூன் 5ஆம் தேதியான இன்று மதியம் சொந்த ஊரான உடுமலைப்பேட்டைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

பெங்களூரு, ஜூன் 05 : பெங்களூருவில் நடந்த ஆர்சிபி வெற்றிப் பேரணியின்போது (bangalore stampede) கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூர் (tiruppur woman dies) மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் காமாட்சி தேவி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது உடல் 2025 ஜூன் 5ஆம் தேதியான இன்று மதியம் சொந்த ஊரான உடுமலைப்பேட்டைக்கு கொண்டு வரப்பட உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் இறுதிபோட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை பெற்றது. கிட்டதட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஆர்சிபி சாம்பியன் பட்டத்தை பெற்றது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
பெங்களூரு கூட்ட நெரிசல்
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், கர்நாடக கிரிக்கெட் சங்கம் சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தன. இதற்காக பெங்களூரு வந்த ஆர்சிபி அணிக்கு சாலை முழுவதும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விராட்கோலி உள்ளிட்ட ஆர்சிபி வீரர்களை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.




சின்னசாமி மைதானத்திலும், அதற்கு வெளி பகுதியிலும் ரசிர்கள் குவிந்தனர். மைதானத்தில் 35,000 இருக்கைகள் மட்டுமே இருந்ததால், அனுமதி சீட்டு இருந்தவர்களுக்கு மட்டும் மைதானத்திற்கு நுழைய அனுமதி அளிக்கப்ப்டடது. இதனால், காத்திருந்த ரசிகர்கள் நுழைவு வாயிலை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர்.
இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால், பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் காயம் அடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த திருப்பூர் பெண்
Karnataka govt has ordered a magisterial inquiry into the June 4 stampede during RCB’s victory celebration near Chinnaswamy Stadium that killed 11 and injured 47. Bengaluru DC Jagadish G, IAS, will probe the incident and submit a report in 15 days pic.twitter.com/v4ZgC63499
— IANS (@ians_india) June 4, 2025
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்தார். அதோடு, படுகாயம் அடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் எனவும் கூறினார்.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் உயிரிழநதுள்ளார். அவர் காமாட்சி தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகள். இவர் தனியார் பள்ளியில் தாளாளராக பணிபுரிந்து வருகிறார்.
காமாட்சி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 2025 ஜூன் 4ஆம் தேதியான நேற்று பெங்களூருவில் நடந்த ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் 2025 ஜூன் 5ஆம் தேதியான இன்று மதியம் சொந்த ஊரான உடுமலைப்பேட்டைக்கு கொண்டு வரப்பட உள்ளது.