பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐடி கேட்டு சிறுவனை தாக்கிய இளைஞர்கள்.. 3 பேர் மீது வழக்குப்பதிவு!
School Student Attacked By Youngsters | திருநெல்வேலியில் பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐடி கொடுக்காததால் சிறுவனை தாக்கிய மூன்று இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னை தாக்கியதாக காவல் நிலையத்தில் சிறுவன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி, ஜூலை 18 : திருநெல்வேலியில் (Tirunelveli) இளம் பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐடியை கேட்டு (Instagram ID) பள்ளி மாணவரை மிரட்டி, தாக்கிய மூன்று இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 10 ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவர்களிடம் அவர்கள் இன்ஸ்டாகிரம் ஐடி கேட்ட நிலையில், அதனை கொடுக்க முடியாது என மாணவர் கூறிய நிலையில், அவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐடி கேட்டு மாணவனை தாக்கிய இளைஞர்கள்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகன் கோபாலகிருஷ்ணன். 20 வயதாகும் கோபாலகிருஷ்ணன் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அந்த மாணவரிடம் கோபாலகிருஷ்ணன், மாணவருக்கு தெரிந்த ஒரு பெண்ணின் பெயரை சொல்லி அவரது இன்ஸ்டாகிராம் ஐடி கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த மாணவன் மறுப்பு தெரிவித்துள்ளார். எவ்வளவு கேட்டும் இன்ஸ்டாகிராம் ஐடி கொடுக்காததால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன், தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து பத்தாம் வகுப்பு மாணவனை மிரட்டி சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதையும் படிங்க : ஏன் லேட்டா வந்தீங்க? கேள்வி கேட்ட ஆசிரியரை மது பாட்டிலால் தாக்கிய மாணவர்கள்.. சிவகாசியில் அதிர்ச்சி




வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் போலீஸ்
இந்த நிலையில், தனக்கு நடந்தது குறித்து பள்ளி மாணவன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாணவரின் புகாரின் அடிப்படையில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர்கள் பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐடியை கேட்டு பள்ளி மாணவனை தாக்கிய இந்த விவகாரம் குறித்து பெற்றோர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தண்டனைக்குறியது
ஒரு பெண்ணிடம் அவரது அனுமதியின்றி மொபைல் எண் கேட்பது கூட குற்றமாக கருதப்படும். பெண்களை பின் தொடர்வது, மொபைல் எண் கேட்பது உள்ளிட்டவை ஈவ் டீசிங்கின் கீழ் வரும். அதுமட்டுமன்றி, குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிலையில், அந்த இளைஞர்கள் இளம் பெண் மற்றும் சிறுவனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்ட நிலையில், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.