விடைபெற்றான் ‘சில்லிகொம்பன்’.. இரு மாநில மக்களை கண்ணீரில் ஆழ்த்திய ‘செல்லமகன்’!!
Chillikomban drowns in canal: சுமார் 40 வயதான இந்தச் சில்லிகொம்பன், தேயிலைத் தோட்டங்களுக்கும் வன எல்லைக் கிராமங்களுக்கும் அடிக்கடி வருவது வழக்கம். ஆனால், தன் வாழ்நாளில் ஒருமுறை கூட அது எந்தவொரு மனிதரையும் தாக்கியது கிடையாது. சில்லிகொம்பனுக்குப் பலாப்பழம் என்றால் அலாதி பிரியம்.
கேரளாவின் நெல்லையம்பதி மலைக்குன்றுகளின் அடையாளமாகவும், மனிதர்களிடம் காட்டிய சாதுவான குணத்தால் “சாந்த குண மாவீரன்” (Gentle Giant) என்றும் அன்போடு அழைக்கப்பட்ட ‘சில்லிகொம்பன்’ என்ற புகழ்பெற்ற காட்டு யானை, கோவை மாவட்டப் பகுதியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட கால்வாயின் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது. வனப்பகுதியில் தண்ணீர் குடிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக 20 அடி ஆழமுள்ள கால்வாய்க்குள் விழுந்த இந்த கம்பீரமான யானையை மீட்க, வனத்துறையினர் தங்களது தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் பலத்த நீரோட்டத்தின் காரணமாக அது தோல்வியில் முடிந்தது.
இதையும் படிக்க: என்ன நடக்குமோ? ‘எல் நினோ’ அச்சுறுத்தல்.. பருவமழை அமைப்பு தலைகீழாக மாறலாம்!
குடும்பத்தில் ஒருவனாக வாழ்ந்த விலங்கு:
ஒரு காட்டு யானையின் மறைவுக்காக இரு மாநில எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், வீடுகளில் சமைக்காமல் கண்ணீர் வடிக்கிறார்கள் என்றால், அது வெறும் விலங்கு மட்டுமல்ல; அந்த மக்களின் குடும்பத்தில் ஒருவனாகவே வாழ்ந்திருக்கிறது என்று அர்த்தம். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கம்பீரமாய் உலா வந்து, தற்போது மறைந்துபோன அந்த ‘சில்லிகொம்பன்’ காட்டு யானையின் நெகிழ்ச்சியான பின்னணி இதோ.
யார் இந்த சில்லிகொம்பன்?
தமிழகத்தின் ஆனைமலை புலிகள் காப்பகமும், கேரளாவின் நெல்லையம்பதி மலைக்காடுகளும் தான் சில்லிகொம்பனின் பூர்வீகப் பகுதிகள் ஆகும். தோற்றத்தில் ஒரு மாவீரனைப் போலக் காட்சியளித்தாலும், குணத்தில் அது ஒரு பெரும் சாது. அதன் சில்லி போன்ற தந்த அமைப்பைப் பார்த்துத் தமிழக மக்கள் ‘சொல்லிகொம்பன்’ (அல்லது சில்லிகொம்பன்) என்று அழைத்தார்கள். அதுவே மலையாளத்தில் ‘சில்லிகொம்பன்’ என்று மாறியது. மேலும், அதன் இடதுபுற தந்தம் லேசாக உடைந்திருந்ததும் இந்தப் பெயர் வரக் காரணமாக அமைந்தது.
மனிதர்களோடு காட்டிய அலாதி பாசம்:
சுமார் 40 வயதான இந்தச் சில்லிகொம்பன், தேயிலைத் தோட்டங்களுக்கும் வன எல்லைக் கிராமங்களுக்கும் அடிக்கடி வருவது வழக்கம். ஆனால், தன் வாழ்நாளில் ஒருமுறை கூட அது எந்தவொரு மனிதரையும் தாக்கியது கிடையாது. சில்லிகொம்பனுக்குப் பலாப்பழம் என்றால் அலாதி பிரியம். பலாப்பழ சீசனுக்காக ஆண்டுதோறும் கேரளாவின் நெல்லையம்பதியிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, தமிழகத்தின் வால்பாறை, நவமலை, சர்க்கார்பதி ஆகிய வனப்பகுதிகளுக்கு விருந்தாளியாக வருவதைக் கடந்த 10 ஆண்டுகளாக அது வழக்கமாகக் கொண்டிருந்தது. மனிதர்களைக் கண்டு மிரளாமல் கம்பீரமாகச் செல்லும் இதன் ‘ராயல் நடைக்காகவே’ சமூக வலைத்தளங்களில் சில்லிகொம்பனுக்குப் பெரும் ரசிகர் பட்டாளமே இருந்தது.
சோகமாய் முடிந்த பலாப்பழ பாசம்:
ஆனால், அந்தப் பலாப்பழத்தின் மீது அது கொண்டிருந்த பாசமே, அதன் இறுதிப் பயணத்திற்குப் பாதையாக அமைந்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் கேரளா திரும்பிய சில்லிகொம்பன், பலாப்பழ சீசனுக்காக மீண்டும் தமிழக எல்லைக்குள் நுழைந்தது. சர்க்கார்பதி வனப்பகுதியில் தண்ணீர் அருந்தச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக 20 அடி ஆழ காண்டூர் கால்வாயில் கால் தவறி விழுந்தது. கால்வாயில் விழுந்த சில்லிகொம்பனால் மீண்டும் கரை ஏற முடியவில்லை.
இதையும் படிக்க: பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.. முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்..
இதனைத் தொடர்ந்து, உடுமலை திருமூர்த்தி அணையின் மதகில் கரை ஒதுங்கிய சில்லிகொம்பனின் உடலை வனத்துறையினர் மீட்டனர். பின்னர், மரகத பூஞ்சோலை எனும் வனப்பகுதியில் அதன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சில்லிகொம்பன் இனி இல்லை என்றாலும், அதன் கம்பீரமான ராயல் நடையும், சாதுவான குணமும் அந்தப் பகுதி மக்களின் மனதை விட்டு என்றும் அகலாது.