தஞ்சாவூர்: தோழியுடன் பேசியதற்காக விமர்சனம்.. மாணவரின் உயிரை வாங்கிய ஆசிரியரின் வார்த்தை

Tanjore Student Dies: தஞ்சாவூரில் 11ம் வகுப்பு மாணவன் ஸ்ரீராம், வகுப்பில் தோழியுடன் பேசியதற்காக ஆசிரியரால் அவமானப்படுத்தப்பட்டதால் விபரீத முடிவெடுத்தார். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆசிரியர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரினர்.

தஞ்சாவூர்: தோழியுடன் பேசியதற்காக விமர்சனம்.. மாணவரின் உயிரை வாங்கிய ஆசிரியரின் வார்த்தை

தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகம்

Published: 

30 Jun 2025 14:21 PM

தஞ்சாவூர் ஜூன் 30: தஞ்சாவூரில் (Tanjore), வகுப்பில் தோழியுடன் பேசியதைத் தவறாகப் புரிந்துகொண்ட ஆசிரியர் ஒருவர், மாணவன் ஸ்ரீராமை (Student Sree Ram) தரக்குறைவாகப் பேசி, அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மனமுடைந்த மாணவன், தனது வீட்டில் தூக்குப்போட்டு விபரீத (Tanjore Student Dies) முடிவெடுத்தார். அவர் எழுதிய கடிதத்தில் ஆசிரியரின் நடவடிக்கையைக் காரணமாகக் குறிப்பிட்டிருந்தது. மாணவனின் மரணத்தைக் கண்டித்தும், ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். “ஆசிரியரை கைது செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையுடன் மாணவனின் உடலை வாங்க மறுத்தனர். பள்ளியில் பதற்றம் நிலவ, காவல்துறையினர் (Tanjore Police) அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சக மாணவியுடன் பேசியதற்காக தரக்குறைவாகப் பேசிய ஆசிரியர்

தஞ்சாவூரில், சக மாணவியுடன் பேசியதற்காக ஆசிரியர் ஒருவர் தரக்குறைவாகப் பேசியதால் மனமுடைந்த 11 ஆம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு விபரீத முடிவெடுத்தது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவன் எழுதிய கடிதத்தினை அடிப்படையாகக் கொண்டு, அவரது பெற்றோர்களும் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த, போலீசார் பள்ளியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ பின்னணி

தஞ்சாவூர் மாதா கோட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் – மணிமேகலை தம்பதியரின் ஒரே மகன் ஸ்ரீராம், வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் காணப்பட்ட அவரை, அவரது பெற்றோர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவரை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. பின்னர், மாணவனின் அறையில் அவர் எழுதிய கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

மாணவனின் கடிதத்தில் காணப்பட்ட தகவல்கள்

மாணவன் எழுதிய கடிதத்தில், “வகுப்பில் தோழியுடன் பேசியதாக ஆசிரியர் சிம்காஸ் தவறாக புரிந்து கொண்டு, தரக்குறைவாகவும், மற்ற மாணவர்களின் முன்னிலையில் அவமானப்படுத்தும் வகையில் பேசினார். இதனால் தான் மனமுடைந்து இம்மாதிரியான முடிவை எடுக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிறந்தோரும் உறவினர்களும், “இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கு சென்றால், மேலும் அவமானப்படுத்துவார் என்ற எண்ணமே அவரை இந்த விபரீத முடிவுக்கு இட்டுவிட்டது” எனத் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு

ஸ்ரீராமின் மரணத்திற்கு காரணமான ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கோரிய பெற்றோரும் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “ஆசிரியர் சிம்காஸுக்கு எதிராக கொலை வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். இல்லையெனில் உடலை வாங்க மாட்டோம்” என்றே அவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டம் காரணமாக பள்ளியில் பதற்றமான சூழல் நிலவ, அசம்பாவிதங்களைத் தவிர்க்க காவல்துறையினர் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம், மாணவர்களின் மனநிலையை மதிக்க வேண்டிய ஆசிரியர்களின் பொறுப்பையும், பள்ளிகளில் மாணவர்களுக்கு உளவியல் ஆதரவு வழங்க வேண்டிய அவசியத்தையும் வெளிப்படையாக முன்வைக்கிறது.

தற்கொலை எண்ணம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

தற்கொலை எண்ணங்கள் வந்தால், நீங்கள் தனியாக இல்லை. மன அழுத்தம், நெருக்கடியான சூழ்நிலை, தவிர்க்க முடியாத அனுபவங்கள் போன்றவை யாரையும் தற்கொலை எண்ணத்துக்கு இட்டுச் செல்லலாம். ஆனால், இதற்கான தீர்வுகள் இருக்கின்றன. தயங்காமல் உதவியை தேடுங்கள்.

மனநல ஹெல்ப்லைன் எண்கள்

தன்னம்பிக்கை – 104 (தமிழ்நாடு அரசின் மனநலம் ஆலோசனை சேவை)

Sneha Foundation – 044 2464 0050 / 044 2464 0060 (24 மணி நேரம், தமிழிலும் செயல்படுகிறது)

iCall (TISS) – +91 9152987821 (WhatsApp வழியாகவும் கிடைக்கும்)