2 நாட்களுக்கு கனமழை கொட்டும்.. சென்னைக்கு வந்த அலர்ட்.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, 2025 அக்டோபர் 4ஆம் தேதியான இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

2 நாட்களுக்கு கனமழை கொட்டும்.. சென்னைக்கு வந்த அலர்ட்.. லேட்டஸ்ட்  வானிலை அப்டேட்!

தமிழகத்தில் மழை

Published: 

04 Oct 2025 06:15 AM

 IST

சென்னை, அக்டோபர் 04 : தமிழகத்தில் இரு தினங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் 2025 அக்டோபர் 4ஆம் தேதியான இன்று கனமழை பெய்யக் கூடும். தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில், அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

உருவாகும் புயல்

அதன்படி, சௌராஷ்ட்ரா கடலோரப்பகுதிகள் மாற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 01-10-2025 காலை வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு நகர்ந்து, அன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அன்று நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று, 02-10-2025 அன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 3ஆம் தேதி காலை 08.30 மணி அளவில் துவாரகாவிலிருந்து (குஜராத்) மேற்கு-தென்மேற்கே சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.

இது, அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். பிறகு, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், சற்று மேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் மேற்கு-தென்மேற்கே நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

2 நாட்களுக்கு கனமழை கொட்டும்

மேலும், 2025 அக்டோபர் 4ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழையும், மிதமான மழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 அக்டோபர் 4ஆம் தேதியான இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read : தமிழகத்தில் படிப்படியாக அதிகரிக்கும் வெப்பநிலை.. அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்குமா?

2025 அக்டோபர் 5ஆம் தேதி மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று (அக்டோபர் 4) நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போவது கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.