Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu News Highlights: அன்புமணியின் பொதுக்குழு.. ராமதாஸ் கொடுத்த பதில்!

Tamil Nadu Breaking News Today 9 August 2025, Updates: மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் 19 விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அன்புமணி தலைமையில் நடந்த இந்த கூட்டம் பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரே வார்த்தையில் பதிலளித்தார்.

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 09 Aug 2025 19:12 PM IST
Share
Tamil Nadu News Highlights: அன்புமணியின் பொதுக்குழு.. ராமதாஸ் கொடுத்த பதில்!
அன்புமணி

Breaking News in Tamil Today 6 August 2025,Updates: அன்புமணி தலைமையில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்,  டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணியை நேரில் வர சொன்னார். ஆனால் அன்புமணி நேரில் ஆஜராக, ராமதாஸ் காணொலி வாயிலாக வாதத்தை எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதியான இன்று பாமக பொதுக்குழு கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அதோடு, மெகா கூட்டணி அமையும் எனவும் கூறினார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மழை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோவை, நீலகிரி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு தொடர்பான செய்திகளை தெரிந்துக்கொள்ள

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 09 Aug 2025 06:47 PM (IST)

    போரூர் – பவர் ஹவுஸ் மெட்ரோ வழித்தடம்

    சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகிளில் முக்கியமான பகுதியான போரூர் முதல் பவர் ஹவுஸ் வரையிலான மேம்பால வழித்தடம் மற்றும் இரட்டை அடுக்கு மேம்பாலப் பணிகள் 2025 செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிவடையும் என தகவல் வெளியாகி உள்ளது.

  • 09 Aug 2025 06:18 PM (IST)

    இளைஞர் உயிரிழப்பு

    விருதுநகர் மாவட்டத்தில் வீட்டில் சாவி தொலைந்ததால், இளைஞர் ஒருவர் வீட்டின் புகைக்கூண்டு வழியாக நுழைந்துள்ளார். இதனை அடுத்து, அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மதுபோதையில் இருந்த அந்த நபர், இதுபோன்ற விபரீத முயற்சியை எடுத்து உயிரிழந்துள்ளார்.

  • 09 Aug 2025 06:10 PM (IST)

    ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை பிடித்துச் சென்ற இலங்கை கடற்படை

    வடக்கு மன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் மற்றும் ஒரு படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனால் சக மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • 09 Aug 2025 05:53 PM (IST)

    ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்தக்கோரிய வழக்கில் உத்தரவு

    பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்தக்கோரிய வழக்கில் தலைமை கால்நடைத்துறை அதிகாரி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய விளக்கங்களுடன் ஆகஸ்ட் 12ம் தேதி ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளது.

  • 09 Aug 2025 05:40 PM (IST)

    தொல்லை கொடுத்த தம்பி கொலை.. மகனைக் காப்பாற்ற தாய் சரண்!

    சென்னை சூளைமேட்டில் மது குடித்து விட்டு தொல்லை கொடுத்த விவகாரத்தில் மகனை கொலை செய்ததாக வடபழனி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் சரணடைந்தார். ஆனால் காவல்துறை நடத்திய விசாரணையில் தம்பியை அண்ணன் கொலை செய்திருக்கிறார். மகனைக் காப்பாற்ற தாய் சரணடைந்தது தெரிய வந்தது.

  • 09 Aug 2025 05:22 PM (IST)

    சொல்வதற்கு ஒன்றுமில்லை.. பாமக பொதுக்குழு குறித்து ராமதாஸ் கருத்து

    பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒற்றை வார்த்தையில் பதிலளித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சொல்வதற்கு ஒன்றுமில்லை என கூறியுள்ளார்.

  • 09 Aug 2025 05:07 PM (IST)

    இரும்பு பட்டறைகளில் ஆயுதங்கள் தயாரித்தால் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை

    திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் இரும்பு பட்டறைகளில் விவசாய பயன்பாட்டு ஆயுதங்களை தவிர அபாயகரமான அரிவாள், கத்தி தயாரிக்க கூடாது. சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தும் ஆயுதங்கள் தயாரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளார். நெல்லை அரியகுளத்தில் இரும்பு பட்டறை நடந்த சோதனையில் 9 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • 09 Aug 2025 04:56 PM (IST)

    மாநில கல்வி கொள்கைக்கு வரவேற்பு தெரிவித்த முத்தரசன்

    தமிழ்நாடு அரசின் மாநில கல்வி கொள்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். தன்னம்பிக்கை, சுய திறனை மாநில கல்வி கொள்கை ஊக்குவிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • 09 Aug 2025 04:41 PM (IST)

    வெம்பக்கோட்டை பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

    விருதுநகர் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்ற பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருபவர்களுடன் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • 09 Aug 2025 04:27 PM (IST)

    அன்புமணி நடத்திய பொதுக்குழு செல்லாது: அன்புமணி ராமதாஸ்!

    2025ஆம் ஆண்டு மே மாதம் 28ம் தேதியுடன் அன்புமணியின் பதவிக்காலம் முடிவடைந்தது. எனவே அன்புமணி நடத்திய பொதுக்குழு செல்லாது. கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் தடையும் விதிக்கவில்லை, அனுமதியும் அளிக்கவில்லை. இதனை ராமதாஸ் தரப்பு பொதுச்செயலாளர் முரளி சங்கர் தெரிவித்துள்ளார்.

  • 09 Aug 2025 04:13 PM (IST)

    பாஜக தேசிய பொதுச்செயலாளரை சந்திக்க ஓபிஎஸ்க்கு அழைப்பு

    சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தரும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழக பாஜக அழைப்பு விடுத்துள்ளது. தனது தொண்டர்களுடன் உரிமை மீட்பு குழு நிர்வாகிகளுடன் இணைந்து ஆலோசனை செய்து முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

  • 09 Aug 2025 03:58 PM (IST)

    ராமதாஸை சுற்றியுள்ள தீய சக்திகள்.. போட்டுடைத்த அன்புமணி!

    ராமதாஸை சுற்றி தற்போது உள்ள சில சுயநலவாதிகள், தீய சக்திகள் நான் சொல்லாததையெல்லாம் சொன்னதாக அவரிடம் சொல்கின்றனர் என மாமல்லபுரம் பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கேட்டிருந்தால் பதவியை கொடுத்திருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

  • 09 Aug 2025 03:43 PM (IST)

    ஈரோட்டில் வெகுவிரைவில் போராட்டம் நடத்துவேன் – சீமான் எச்சரிக்கை

    ஈழத்தமிழ் சொந்தங்களை காக்க ஈரோட்டில் வெகுவிரைவில் போராட்டம் நடத்துவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பவானிசாகர் முகாமில் வசித்து வரும் இலங்கை தமிழ் மக்களுக்கு நிபந்தனைகளுடன் கொடுக்கப்பட்ட வீட்டில் அதிகாரிகள் கெடுபிடி காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

  • 09 Aug 2025 03:29 PM (IST)

    புத்தேரி பகுதியில் 4 வழிச்சாலை பணிகள்.. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

    நாகர்கோயில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு புத்தேரி பகுதியில் 4 வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

  • 09 Aug 2025 03:14 PM (IST)

    திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு புதிய பொறுப்பு

    அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் திமுகவின் இலக்கிய அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

  • 09 Aug 2025 03:00 PM (IST)

    தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை – இபிஎஸ் மீது தாக்கு

    மத்திய அரசு கொடுத்த புள்ளி விவரத்தையே தவறு என தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி பேசுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பொருளாதார வளர்ச்சி குறித்து அடிப்படை கூட தெரியாத அறிவிலி போல் பேசுவதாகவும் கூறியுள்ளார்.

  • 09 Aug 2025 02:41 PM (IST)

    மதுவிலக்கை அமல்படுத்துவதே பாமக இலக்கு – தீர்மானம் நிறைவேற்றம்!

    தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்துவதே பாட்டாளி மக்கள் கட்சியின் இலக்கு என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மக்களை ஏமாற்றும் மோசடி திட்டங்களை நிறைவேற்றும் தமிழ்நாடு அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 09 Aug 2025 02:26 PM (IST)

    திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது: அன்புமணி திட்டவட்டம்!

    2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தொண்டர்கள் விரும்பும் வகையில் கூட்டணி அமைக்கப்பட்டு பாமக ஆட்சிக்கு வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • 09 Aug 2025 02:11 PM (IST)

    கல்வியும் சுகாதாரமும் தமிழ்நாட்டின் இரு கண்கள்: முதலமைச்சர் ஸ்டாலின்

    கல்வியும் சுகாதாரமும் நமது தமிழ்நாட்டின் இரு கண்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் செங்கல்பட்டில் நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். ஏழை மக்களுக்கு இலவச பட்டா என்பது பேருதவி என தெரிவித்த அவர், 2021 முதல் தற்போது வரை சுமார் 17 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம் என கூறியுள்ளார்.

  • 09 Aug 2025 01:55 PM (IST)

    பாமக தலைவராக அன்புமணி தொடர்வார்.. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

    2026 ஆகஸ்ட் வரை பாமக தலைவர் அன்புமணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா பதவியில் நீடிப்பார்கள் என அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்புமணியின் செயல்பாட்டில் பாமக முழு நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

  • 09 Aug 2025 01:38 PM (IST)

    வீட்டில் வைத்து பட்டாசு தயாரிப்பு.. 3 பேர் உயிரிழப்பு

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஒருவர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

  • 09 Aug 2025 01:16 PM (IST)

    ஐ.டி ஊழியர் கவின் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

    நெல்லையில் ஐ.டி ஊழியர் கவின் ஆணவ படுகொலையை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆணவ படுகொலை தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வலியுறுத்தப்பட்டது.

  • 09 Aug 2025 01:02 PM (IST)

    தீண்டாமை சுவர் அகற்ற எதிர்ப்பு.. ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

    கரூர் மாவட்டத்தில் உள்ள முத்துலாடம்பட்டி தீண்டாமை சுவர் அகற்றுவதை எதிர்த்து நள்ளிரவில் ஒரு பிரிவினர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முத்துலாடம்பட்டியில் 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • 09 Aug 2025 12:44 PM (IST)

    குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தொல்லை.. மகனை கொன்ற தாய்!

    சென்னையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தொடர்ச்சியாக சண்டையிட்டு மிரட்டி வந்த மகனை ஆத்திரத்தில் கத்தியால் கொலை செய்த தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலை செய்துவிட்டு வடபழனி காவல்நிலையத்தில் தாய் சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • 09 Aug 2025 12:30 PM (IST)

    விநாயகர் சதுர்த்தி விழா.. சிலைகளை கரைக்க வழிமுறைகள் வெளியீடு

    விநாயகர் சதுர்த்தி விழாவானது ஆகஸ்ட் 27ம் தேதி புதன்கிழமை வருகிறது. இதனை முன்னிட்டு நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க வழிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  • 09 Aug 2025 12:17 PM (IST)

    பாமக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.. மாவட்ட உறுப்பினர்கள் பங்கேற்பு

    மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில பாமக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் ராமதாஸ் புகைப்படத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 09 Aug 2025 12:04 PM (IST)

    ஒவ்வொரு தெருவாக சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி!

    சென்னையில் ஒவ்வொரு தெருவாக சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கப்பட்டது. இதனை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார். நாள் ஒன்றிற்கு தோராயமாக 3000 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 09 Aug 2025 11:48 AM (IST)

    திருப்புவனம் அஜித்குமார் மரணம்.. நிகிதா பொய் புகார் கொடுத்தாரா?

    திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக நிகிதா அளித்தது பொய் புகாராக இருக்கலாம் என சிபிஐ சந்தேகமடைந்துள்ளது. காரில் இருந்த நகை தொலைந்ததாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் கோவில் பார்க்கிங்கை விட்டு நிகிதா கார் வெளியே செல்லவே இல்லை என சிபிஐ விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

  • 09 Aug 2025 11:32 AM (IST)

    கோவையில் இண்டிகோ விமானம் மீது லேசர் லைட் .. போலீசார் விசாரணை!

    நேற்றிரவு (ஆகஸ்ட் 8) பெங்களூருவில் இருந்து கோயம்புத்தூருக்கு இண்டிகோ விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது தரையிறங்கும்போது விமானி அறையை நோக்கி லேசர் லைட் அடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமான நிலையம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பீளமேடு போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • 09 Aug 2025 11:16 AM (IST)

    வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படவில்லை.. ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

    வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததன் காரணமாக காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு செல்லவில்லை என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். உடனடியாக பாசன கால்வாய்களை தூர்வாரி விவசாயிகளுக்கு கைகொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • 09 Aug 2025 11:00 AM (IST)

    அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமன ஆணை – 3 பேர் கைது

    கன்னியாகுமரி மாவட்டம் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் பணிக்கான போலி நியமன ஆணைகளை வழங்கிய 3 பேரை விழுப்புரத்தில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி லெட்டர் பேடு, அரசு முத்திரை, கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

  • 09 Aug 2025 10:41 AM (IST)

    கரடி கடித்து 3 பெண்கள் காயம்.. கூண்டு வைத்து பிடிக்கும் பணி தீவிரம்!

    தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் சுற்றித்திரியும் கரடியை பிடிக்க 2வது நாளாக வனத்துறை கூண்டு வைத்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கரடி கடித்து 3 பெண்கள் காயமடைந்த நிலையில் விரைந்து பிடிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

  • 09 Aug 2025 10:26 AM (IST)

    பாமக பொதுக்குழு கூட்டம்.. அன்புமணி பேசப்போவது என்ன?

    பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அன்புமணி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே தந்தை ராமதாஸூடன் கருத்து மோதல் நிகழ்ந்து வரும் நிலையில் இன்றைய கூட்டத்தில் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • 09 Aug 2025 10:10 AM (IST)

    திமுக ஐடி அணியைச் சேர்ந்தவர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

    ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் பகுதியில் வசித்து வரும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த சௌந்தர், கௌதமன் ஆகியோர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • 09 Aug 2025 09:52 AM (IST)

    பொங்கல் பண்டிகைக்குள் 110 புதிய சொகுசு பேருந்துகள்!

    பொங்கல் பண்டிகைக்குள் 110 புதிய சொகுசு பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 4,300 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 1500 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை இரண்டு கட்டங்களாக பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 09 Aug 2025 09:33 AM (IST)

    ஆடி மாத பௌர்ணமி.. வெகுவிமரிசையாக நடைபெற்ற கள்ளழகர் தேரோட்டம்

    ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு மதுரையில் புகழ்பெற்ற கள்ளழகர் கோயில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கள்ளழகரான சுந்தரராஜ பெருமாள் பூதேவி மற்றும் ஸ்ரீதேவியுடன் தேரில் எழுந்தருளினார்.

  • 09 Aug 2025 09:17 AM (IST)

    கொட்டும் மழையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

    ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலத்தில் கொட்டும் மழையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் நான்கு மணி நேரம் காத்திருந்து, அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

  • 09 Aug 2025 09:01 AM (IST)

    6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை.. திமுக ஆட்சியை விமர்சித்த இபிஎஸ்

    திமுக ஆட்சியில் கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மக்களிடம் நன்மதிப்பை அதிமுக அரசு பெற்றிருந்ததாகவும், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

  • 09 Aug 2025 08:47 AM (IST)

    ஆணவக்கொலைகளை தடுக்கும் வகையில் சிறப்பு சட்டம்.. விசிக ஆர்ப்பாட்டம்

    ஆணவக்கொலைகளை தடுக்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கிறார்.

  • 09 Aug 2025 08:37 AM (IST)

    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு? – அதிர்ச்சி தகவல்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்லூரி மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டலில் சாப்பிட்ட சிக்கன் ரைஸ்தான் உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • 09 Aug 2025 08:32 AM (IST)

    வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு.. முதலமைச்சர் பெருமிதம்

    கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது, இதுதான் கம்பர் கண்ட கனவு என கூறினார். மேலும் படிக்க

  • 09 Aug 2025 08:22 AM (IST)

    திமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது? – இபிஎஸ் கேள்வி

    திமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது? என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஆட்சியில் ரூ.3.05 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது எனவும், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளபட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

  • 09 Aug 2025 08:05 AM (IST)

    கனமழை காரணமாக திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே அம்மாவட்டத்தில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

  • 09 Aug 2025 07:48 AM (IST)

    பாமக பொதுக்குழு கூட்டம்.. அன்புமணி எடுத்த அதிரடி முடிவு

    பாமக தலைவர் அன்புமணி தலைமையில் இன்று மாமல்லபுரத்தில் இருக்கக்கூடிய கான்ப்ளூயன்ஸ் அரங்கில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதனை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்த்துள்ளார். ஆனாலும் கூட்டம் நடைபெறும் நிலையில் ஜனநாயக முறையில் விவாதிப்பதற்காக காத்திருக்கிறேன் என அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

  • 09 Aug 2025 07:34 AM (IST)

    எடப்பாடி பழனிசாமிக்கு கவலை வேண்டாம்.. சண்முகம் பதிலடி

    தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக சாடி வருகிறார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் எங்களைப் பற்றி எடப்பாடி பழனிசாமி கவலைப்பட வேண்டாம் என கூறியுள்ளார். மேலும் படிக்க

  • 09 Aug 2025 07:19 AM (IST)

    போக்குவரத்து நெரிசல்.. தாம்பரம் பகுதியில் இன்று முதல் புது ரூல்ஸ்!

    தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பல முக்கிய சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 09 Aug 2025 07:01 AM (IST)

    தமிழக சட்டமன்ற தேர்தல்.. வியூகம் அமைக்க பாஜக முடிவு

    2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பிலான ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெறுகிறது. இதில் பாஜக தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் கலந்து கொள்ளவுள்ளார். தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published On - Aug 09,2025 7:00 AM