தென்மேற்கு பருவமழை… 3 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Weather Update : அந்தமான கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை 2025 மே 13ஆம் தேதியான நேற்று துவங்கி உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை வெளுக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

தென்மேற்கு பருவமழை... 3 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!

மழை

Published: 

14 May 2025 06:20 AM

சென்னை, மே 14 : தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு ஒருசில மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என வானிலை மையம் (Tamil Nadu Weather Alert) தெரிவித்துள்ளது. சென்னையில் 2025 மே 14ஆம் தேதியான இன்று மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் 2025 மார்ச் மாதம் முதலே வெயில் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. தற்போது வரை வெயில் படுத்தி எடுக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதற்கிடையில், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து ஒருசில இடங்களில் குளிர்ச்சியான சூழல் இருக்கிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

3 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை

அதன்படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு, அந்தமான கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. 2025 மே 14ஆம் தேதியான இன்று தமிழக்ததில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 மே 15ஆம் தேதியான நாளை கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், நாமக்கல், சேலம், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுக்கும். மற்ற மாவட்டகளில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 மே 16ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

வானிலை மையம் அலர்ட்

சென்னையை பொறுத்தவரை 2025 மே 14ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, 2025 மே 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில பகுதியில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும். இதனால், தமிழகத்தில் ஒரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான கடல் பகுதிகள், நிகோபர் தீவு பகுதிகளில் 2025 மே 13ஆம் தேதியான நேற்று துவங்கியது. எப்போது, மே மாதத்தின் கடைசி வாரத்தில் துவங்கும் நிலையில், 2025ஆம் ஆண்டில் முன்கூட்டியே பருவமழை தொடங்கி இருக்கிறது. இந்த தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் ஜூன் முதல் வாரத்தில் துவங்கும் என சொல்லப்படுகிறது.