சிறுமி பாலியல் கொலை வழக்கு.. புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
Puducherry Girl Harassment Case : புதுச்சேரியில் 5 வயது சிறுமியை முதியவர் மற்றும் இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் குற்றவாளி என புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவருக்கான தண்டனை விவரம் மே 5- இல் வெளியிடப்பட உள்ளது.

சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு
புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியில் வீட்டின் அருகே கடந்த 2024- ஆம் ஆண்டு மார்ச் 2- ஆம் தேதி 5 வயது வகுப்பு சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த சிறுமி திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், 2 நாட்களுக்குப் பிறகு அந்தப் பகுதியில் உள்ள வாய்க்காலில் சிறுமியின் சடலம் மூட்டையில் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த சிறுமியின் சடலம் கதிர்காம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடல் கூறாய்வு செய்யப்பட்டது. இதில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
எஸ்.பி. தலைமையில் சிறப்பு குழு விசாரணை
இதில், சிறுமியை இருவர் தூக்கி சென்றது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில், இதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் ( 56 வயது) மற்றும் கருணாஸ் (20 வயது) ஆகியோரை போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்திருந்தனர். இதில், விவேகானந்தன் 2024- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கருணாஸ் மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிோப்பாளர் கலைவாணன் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தது.
மேலும் படிக்க: விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. திடீரென மாற்றப்பட்ட நீதிபதி.. பின்னணியில் என்ன நடந்தது?
குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு
இந்த குழு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் 500 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக மருத்துவ சான்றுகள், தடயவியல் சான்றுகள் உள்பட 37 வகையான சான்றுகள் மற்றும் 81 வகையான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது. மேலும், 54 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கானது நீதிபதி சுமதி முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ( ஏப்ரல் 30) விசாரணைக்கு வந்தது.
மே 5- இல் தண்டனை விவரம் அறிவிப்பு
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பச்சையப்பன், குற்றவாளி கருணாசுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும், இவருக்கான தண்டனை விவரம் மே 5- ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். முதியவர் விவேகானந்தன் தற்கொலை செய்ததால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் படிக்க: நொங்கு பறிக்க முயன்றபோது விபரீதம்.. மின்சாரம் தாக்கி இரு கல்லூரி மாணவர்கள் பலி.. காஞ்சிபுரத்தில் சோகம்!!