முடிவுக்கு வரும் தந்தை மகன் மோதல்? ராமதாஸ் தலைமையில் இன்று நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..
பிப்ரவரி 27, 2026ஆம் தேதியான நேற்று ராமதாஸ் தரப்பில் ஒரு அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. அதாவது, மாம்பழச் சின்னம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்த கடிதத்தை ரத்து செய்யக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை பாமக நிறுவனர் ராமதாஸ் திரும்பப் பெற்றார்.

கோப்பு புகைப்படம்
விழுப்புரம், பிப்ரவரி 28, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியைப் பொருத்தவரையில், அது தற்போது இரண்டாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறது. தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. எனவே, அன்புமணி தரப்பு பாமக மற்றும் ராமதாஸ் தரப்பு பாமக என இரண்டாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், தைலாபுரத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைக்கப்படும் என்பது குறித்து நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீடிக்கும் தந்தை மகன் போட்டி:
பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பைச் சுற்றி அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையேயான அதிகாரப் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அன்புமணி தரப்பு பாட்டாளி மக்கள் கட்சி தனியாகச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “ஓபிஎஸ் வெளியேறியது அதிமுகவினருக்கு தீபாவளி”.. சி.வி.சண்முகம் விமர்சனம்!!
ஆனால், அந்த கூட்டணியின் காரணமாக ஏற்பட்ட பல்வேறு கருத்து வேறுபாடுகளே இந்த அதிகாரப் போட்டிக்கு காரணம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ராமதாஸ், “பாட்டாளி மக்கள் கட்சி என்பது அன்புமணிக்கு சொந்தமானது அல்ல” என முன்பு குறிப்பிட்டிருந்தார். ஆனால் தேர்தல் ஆணையம் தரப்பில் கட்சியின் தலைவர் அன்புமணிதான் என்றும், மாம்பழச் சின்னம் அன்புமணிக்கே வழங்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிராக ராமதாஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையின் போது தேர்தல் ஆணையம் தரப்பில் இதே வாதங்கள் தெளிவாக முன்வைக்கப்பட்டன.
அன்புமணிக்கு எதிரான வழக்கு – வாபஸ் பெற்ற ராமதாஸ்:
இந்தச் சூழலில், பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாகப் பிரியுமா அல்லது என்ன முடிவு எடுக்கப்படும் என்பது குறித்து தொண்டர்கள் இடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மேலும் படிக்க: தமிழகத்தில் குறையும் மழை.. அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை..
இந்த நிலையில், பிப்ரவரி 27, 2026ஆம் தேதியான நேற்று ராமதாஸ் தரப்பில் ஒரு அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. அதாவது, மாம்பழச் சின்னம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்த கடிதத்தை ரத்து செய்யக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை பாமக நிறுவனர் ராமதாஸ் திரும்பப் பெற்றார்.
அன்புமணிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றதன் மூலம் மீண்டும் அவர்கள் ஒன்று சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், சென்னையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி நிகழ்ச்சியில் கட்சிக் கொடிகள் இடம்பெற்றிருந்தன. அப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.
மீண்டும் ஒன்றிணையும் பாமக?
இதன் அடிப்படையில், அன்புமணியும் ராமதாசும் சமரசம் செய்து ஒன்று சேர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகைய குழப்பமான நிலையில், இன்று ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தின் முடிவில் யாருடன் கூட்டணி அமைப்பது, அன்புமணி–ராமதாஸ் தொடர்பான நிலைப்பாடு என்ன என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.