விமானத்தில் இருந்து திடீரென குதித்த பயணி – சென்னையில் பரபரப்பு
Shocking Incident at Chennai Airport : ஷார்ஜாவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஏர் அரேபியா விமானத்தில் இருந்து பயணி ஒருவர் அவசரகால கதவைத் திறந்து மின்னல் வேகத்தில் வெளியே குதித்து தப்பி ஓடியிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பயணியை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாதிரி புகைப்படம்
சென்னை, மே 3 : ஷார்ஜா நகரில் இருந்து சென்னை நோக்கி வந்த ஏர் அரேபியா விமானம் ஓடுபாதையில் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்து பயணி ஒருவர் அவசரகால கதவை திறந்து விமானத்தில் இருந்து குதித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சார்ஜாவில் இருந்து மே 3, 2026 அன்று அதிகாலை 3 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு ஏர் அரேபியன் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் ஓடு பாதையில் தரையிறங்கி டாக்ஸி வேயில் நகர்த்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 217 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
விமானத்தில் இருந்து திடீரென குதித்த பயணியால் பரபரப்பு
இந்த நிலையில் விமானத்தில் இருந்து பயணி ஒருவர் அவசரகால கதவைத் திறந்து மின்னல் வேகத்தில் வெளியே குதித்து தப்பி ஓடியிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விமான பணியாளர்கள் அவசரகால அபாய அறிவிப்பு எச்சரிக்கை மணியை ஒலிக்கவிட்டனர். இதனையடுத்து உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று அந்த பயணியை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதையும் படிக்க : பழனிக்கு செல்லும் வழியில் கார் விபத்தில் சிக்கிய ஆந்திர குடும்பம்.. பச்சிளம் குழந்தை உப்டப 3 பேர் பலி!
இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த 30 வயதான முகமது நிஜாமுதீன் செரீப் என்பது தெரிய வந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? அல்லது வேறேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பிரச்னை காரணமாக ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் சுமார் 4 மணி நேரம் தாமதமாக காலை 7.45 மணிக்கு சார்ஜா புறப்பட்டு சென்றது. இதனால் சரியான நேரத்தில் விமானத்தில் ஏற முடியாமல் பயணிகள் விமான நிலையத்திலேயே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த முகம்மது நிஜாமுதீன் ஷெரீஃப் என்ற அந்த பயணியை சிராய்ப்புக் காயங்களுடன் மீட்ட விமான நிலைய காவல்துறையினர், காயங்களுக்கு முதலுதவி அளித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக டெல்லியில் இருந்து வந்துள்ள மத்திய உளவுத் துறை அதிகாரிகளும் அந்த பயணியிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிக்க : ஸ்மார்ட் போன் ரூபத்தில் வந்த எமன்.. மொட்டை மாடியிலிருந்து விழுந்த இளைஞர்.. தீவிர சிகிச்சையில் பிரிந்த உயிர்!
பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்ட விமானம்
இதனையடுத்து இந்த விமானம் டாக்ஸி வேயில் நிறுத்தப்பட்டதன் காரணமாக லண்டனில் இருந்து மே 3, 2026 அன்று அதிகாலை சென்னை நோக்கி வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாததால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்து 234 பயணிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.