கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் இதுதான்… யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை – நிர்மலா சீதாராமன் பேட்டி
Karur Stampede Update: தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

நிர்மலா சீதாராமன்
கரூர், செப்டம்பர் 29 : கரூரில் (Karur) சமீபத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர். பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பாஜக கூட்டணி சார்பில் எம்பி ஹேமாமாலின் தலைமையில் 8 பேர் கொண்ட விசாரணைக் குழுவை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா செப்டம்பர் 27 அன்று அறிவித்தார். இவர்கள் கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி பாஜக தலைமைக்கு அறிக்கை அளிப்பார்கள். இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 29, 2025 அன்று கரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் இதுதான்
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர், பின்னர்பத்திரிகையாளர்களிடம் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், கரூரில் நடந்த இந்த நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அதிக ஆர்வத்துடன் வந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்தான் இந்த துயரத்துக்கு காரணம். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள். தங்களது அன்புக்குரியவர்களை இழந்ததால் அவர்கள் கதறி அழுவதை பார்த்தபோது மனம் மிகவும் கலங்கியது. வார்த்தைகளால் அவர்களை ஆறுதல் கூற முடியவில்லை என்றார்.
இதையும் படிக்க : மக்களின் அழுகுரலை கடந்து செல்வதற்கான வழியின்றி தவிக்கிறேன் – ஆதவ் அர்ஜுனா பதிவு..
மேலும் பேசிய அவர், இனி இதுபோன்ற சம்பவம் நாட்டில் எங்கும் நிகழக்கூடாது. சம்பவம் நடந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கரூருக்கு வர விரும்பினார். ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால் வர இயலவில்லை. அதனால் மத்திய அரசின் சார்பில் நாங்கள் இங்கு வந்துள்ளோம். இந்தச் சம்பவம் தொடர்பாக எந்தக் கட்சியையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. நான் இங்கு அரசியல் பேச்சு நடத்த வரவில்லை. யார் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்பதை நிர்ணயிக்க எனக்கு அதிகாரமில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பக்கபலமாக மத்திய அரசு எப்போதும் நிற்கும் என்று பேசினார்.
இதையும் படிக்க : கரூர் விரையும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்? சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டம்..
குணமடைந்து வீடு திரும்பிய 51 பேர்
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையயில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 110 பேரில் 51 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் 51 பேர் உட்பட உயர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்று விளக்கமளித்தார்.