SIR எதிர்ப்பு திமுகவின் திசைதிருப்பு நாடகமே.. நயினார் நாகேந்திரன் சாடல்!!
Nainar nagendran critic Dmk: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுகவுக்கு எதிராக நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்தை பல்வேறு கட்சிகள் புறக்கணித்ததையும் சுட்டிகாட்டி அவர் திமுகவின் நாடகம் என்று கூறியுள்ளார்.
சென்னை, நவம்பர் 03: தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision) கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக பாஜக (BJP) மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். அதோடு, ஜனநாயகத்தின் மீதுசிறிதும் அக்கறை இருந்தால், முறையாக வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்ப்பதைவிடுத்து, எஞ்சியிருக்கும் நாட்களில் தங்களுக்கு வாக்களித்த மக்களின் குறைகளைத் தீர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டும், தவெக, நாதக, அமமுக உள்ளிட்ட 20 கட்சிகள் புறக்கணித்தன. அதேசமயம், முதல்வர் தலைமையில் நடந்த அக்கூட்டத்தில் SIR-க்கு எதிராக பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: வாக்காளர் சிறப்பு திருத்தம்.. தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம்..
அதில், முக்கியமானதாக எஸ்ஐஆர் (SIR) நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்து கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை வெளிப்படையாக கடைப்பிடித்து, உரிய அவகாசம் தந்து, 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு பின்பு, SIR நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
திமுகவை சாடிய நயினார் நாகேந்திரன்:
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் ஸ்டாலின், தற்போது மட்டும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம் என்று சாடியுள்ளார்.
பல கட்சிகள் புறக்கணிப்பு:
மேலும், பல்லாண்டுகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை, ஏதோ அந்நியமானது போல, பிரதானமாகக் காட்சிப்படுத்தி, மழைவெள்ள பாதிப்பு, ஊழல், விவசாயிகள் படும் அல்லல் ஆகியவற்றை மறைத்து, குளிர்காய முயற்சிப்பது இனியும் செல்லாது. திமுகவின் திசைதிருப்பும் நாடகத்தை நன்கு அறிந்து, பல கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ள நிலையில், தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: கரையானை போல் இபிஎஸ் அதிமுகவை அரித்துக்கொண்டிருக்கிறார்: சேகர் பாபு விளாசல்!
திமுகவின் திசைதிருப்பு நாடகம்:
அதோடு, திமுக அரசின் தொடர் திசைதிருப்பு நாடகத்தையும் வெற்று விளம்பரத்தையும் பார்த்துப் பார்த்து சலித்துப்போன தமிழக மக்கள், இந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த எதிர்ப்பு நாடகத்தையும் புறக்கணிப்பர். ஜனநாயகத்தின் மீதுசிறிதும் அக்கறை இருந்தால், முறையாக வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்ப்பதைவிடுத்து, எஞ்சியிருக்கும் நாட்களில் தங்களுக்கு வாக்களித்த மக்களின் குறைகளைத் தீர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.



