நாளை 234 தொகுதிகளுக்கும் நாதக வேட்பாளர்கள் அறிமுகம்.. எந்த தொகுதியில் சீமான் போட்டி?
NTK candidates to be intro: அதேசமயம், கூட்டணியில் இடம்பெற்றால் அக்கட்சியின் செல்வாக்கு உயர அதிக வாய்ப்புள்ளது. ஆனால், கூட்டணியை விரும்பாத சீமான் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே களம் கண்டு வருகிறார். இம்முறை விஜய்யின் அரசியல் வருகையால் அதீத மகிழ்ச்சியில் இருந்தார்.

சீமான்
திருச்சி, பிப்ரவரி 20: திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாளை “மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு” என்ற பெயரில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் நாதக சார்பில் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யப்படுகின்றனர். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதையொட்டி, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் வியூகங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மேலும் படிக்க: புதிய கட்சியை தொடங்கினார் பண்ருட்டி ராமச்சந்திரன்.. “ஓபிஎஸ் அத்தியாயம் முடிந்ததாக காட்டம்”..
நாதக வாக்கு வங்கி நிலவரம்:
அந்தவகையில், 2016ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, அதன் பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது. 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 1.07% வாக்குகளை பெற்ற அக்கட்சி, 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 3.9% வாக்குகளை பெற்றது. தொடர்ந்து, நடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 6.58% ஆக உயர்ந்த அக்கட்சியின் வாக்கு சதவீதம், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 8.2% ஆக அதிகரித்தது.
ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை:
இவ்வாறு படிப்படியாக அக்கட்சியின் வாக்கு வங்கி உயர்ந்து வந்தாலும், தற்போது வரை ஒரு தொகுயில் சட்டமன்ற உறுப்பினரை பெறும் அளவு கூட அக்கட்சி பலம் பெறவில்லை. அதேபோல், உள்ளாட்சி தேர்தல்களிலும் அக்கட்சி ஒரு உறுப்பினரை கூட பெறாமல் உள்ளது. தாங்கள் ஜெயிக்கமாட்டோம் என்பது தங்களுக்கு நன்கு தெரியும் என்றும், எனினும் தங்களது கட்சியின் மக்கள் செல்வாக்கை உயர்த்த தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி ஒவ்வொரு முறையும் தேர்தலை சந்தித்து வருகிறது. அதன் பலனாக, அக்கட்சியின் வாக்கு வங்கியும் தமிழகத்தில் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
விஜய் மீது எதிர்பார்ப்பு:
அதேசமயம், கூட்டணியில் இடம்பெற்றால் அக்கட்சியின் செல்வாக்கு உயர அதிக வாய்ப்புள்ளது. ஆனால், கூட்டணியை விரும்பாத சீமான் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே களம் கண்டு வருகிறார். இம்முறை விஜய்யின் அரசியல் வருகையால், மகிழ்ச்சியில் இருந்தார். தன்னுடன் நிச்சயம் விஜய் பயணிப்பார் என்று அதீத நம்பிக்கையில், இருந்தார். இதற்காக, தொடக்கத்தில் அவரது அரசியல் வருகையை அதிகமாக வரவேற்றதும் அவர் தான். ஆனால், விஜய் தரப்பில் இருந்து இதனை பொருட்டாக கருதவில்லை. இதனால், அதிருப்தியடைந்த நாதக, தவெகவை சரமாரியாக விமர்சிக்க தொடங்கியது.
திருச்சியில் நாளை பிரம்மாண்ட மாநாடு:
இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்தே எதிர்கொள்ள இருக்கிறது என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்துவிட்டார். பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார் சீமான். நாம் தமிழர் கட்சி சார்பில் ஏராளமான தொகுதிகளில் வேட்பாளர் அறிமுகக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் எதிர்வரும் சட்டசபை தேர்தலையொட்டி திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கிறது அக்கட்சி.
மேலும் படிக்க: பதற்றமான வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை… தேர்தல் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!
சீமான் போட்டியிடும் தொகுதி:
இந்த மாநாட்டில் வேட்பாளர் அறிமுகக் கூட்டமும் இணைந்து நடப்பதால் 234 வேட்பாளர்களையும் மேடையேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு சரிசம வாய்ப்பு என்ற கொள்கையை கொண்ட அக்கட்சி, 117 பெண் வேட்பாளர்களும், 117 ஆண் வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றனர். குறிப்பாக, இந்த கூட்டத்தில் சீமான் தான் போட்டியிடும் தொகுதியையும் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.